உல்லாசப் பயணங்களை ஊக்குவிக்கும் வகையில் கொவிட்-19 தடுப்பூசி பாஸ்போர்ட் திட்டம் அமையலாம். ஆனால் இத்திட்டத்தைச் செயல்படுத்தும்போது வேறு சவால்களும் உதிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்.
உலக நாடுகள் பலவற்றில் கொவிட்-19 தடுப்பூசியை மக்களுக்குப் போடும் விகிதம் அதிகரித்து வருகிறது.
தடுப்பூசி போட்டுக்கொண்டவர் என்று ஒருவரை அடையாளப்படுத்தும் ஆவணம்தான் இந்தத் தடுப்பூசி பாஸ்போர்ட்.
தற்போதுள்ள நிலையைக் காட்டிலும் அனைத்துலகப் பயணங்களை மேலும் பெரிய அளவில் தொடங்க இத்திட்டம் வழிவகுக்கலாம்.
இதனால் சுற்றுப்பயணத்துறை மீண்டுவரும் என்ற நம்பிக்கையில் பயண முகவர்கள் இருந்தாலும் துறைசார் நிபுணர்கள் இதன் தொடர்பில் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர்.
சில தடுப்பூசிகள் குறைந்த பாதுகாப்பை மட்டுமே வழங்குகின்றன. இதனால் அத்தகைய தடுப்பூசியை ஒருவர் போட்டிருந்தாலும் அவர் சென்றடையும் நாட்டில் தேவைப்படும் உத்தரவாதம் இருக்காது என்பது சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோகென் வெர்ட்சின் கருத்து.
ஃபைசர்-பயோஎன்டெக், மொடர்னா தடுப்பூசிகளின் செயல்திறன் கிட்டத்தட்ட 90 விழுக்காடாக இருக்கும் நிலையில் சினொவேக் தடுப்பூசியின் செயல்திறன் 51 விழுக்காடு என்று உலகச் சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
தடுப்பூசி வகைகள், அவற்றின் செயல்திறன் நீடிக்கும் காலம் போன்றவற்றை நாடுகள் ஆராய வேண்டும் என்றார் நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் மூத்த சுற்றுப்பயண விரிவுரையாளர் டாக்டர் மைக்கல் சியாம்.
ஆராய்ந்த பின்னரே பிற நாடுகளின் தடுப்பூசி பாஸ்போர்ட்டுகளை அங்கீகரிக்க வேண்டும் என்றார் அவர்.
இவ்வாறு அனைத்துலக அளவில் அடையாளம் காணப்படும்
பாஸ்போர்ட் இன்னமும் உருவாக்கப்படவில்லை என்றாலும் ஒரு சில திட்டங்கள் ஏற்கெனவே நடப்பில் உள்ளன.
அனைத்துலக விமானப் போக்குவரத்துச் சங்கத்தின் கைபேசி செயலி வழி பயணிகள், தங்களின் பயணத்திற்கு முந்திய கொவிட்-19 பரிசோதனை முடிவுகளை விமானச் சேவைகளுடனும் குடிநுழைவுச் சோதனைச்சாவடிகளுடனும் பகிர்ந்துகொள்ளலாம்.
40க்கு மேற்பட்ட விமானச் சேவைகள் இதன் முன்னோட்டத் திட்டத்தில் இணைந்துள்ளன. சிங்கப்பூர், பனாமா போன்ற நாடுகள் இதை நடைமுறையும் படுத்திவிட்டன.
அதேபோல் ஐரோப்பிய ஒன்றியம் அதன் மின்னிலக்க கொவிட்-19 சான்றிதழ் திட்டத்தை இம்மாதம் முதல் தேதி தொடங்கியது. இதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாட்டு மக்களுக்கும் தனிமை உத்தரவிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.
தனிமை உத்தரவு கட்டுப்பாடுகள் முற்றிலுமாக அகற்றப்பட்டால் மட்டுமே கொள்ளைநோய்க்கு முந்திய நிலைக்குச் சுற்றுப்பயணத்துறை திரும்ப முடியும் என்றார் பயண முகவர் அலிஷியா சியா.