கடந்த திங்கட்கிழமைக்கும் புதன்கிழமைக்கும் இடையே 360க்கும் அதிகமான மோசடிகள் சம்பந்தப்பட்ட 150க்கும் மேற்பட்ட சம்பவங்களைக் தனது மோசடி தடுப்புப் பிரிவு அடையாளம் கண்டதாகக் காவல்துறை இன்று (ஜூலை 10) தெரிவித்துள்ளது.
டிபிஎஸ், யூஓபி, ஓசிபிசி, எச்எஸ்பிசி, சிட்டிபேங்க், ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஆகிய ஆறு வங்கிகளுடன் இணைந்து செயல்பட்டு மோசடி தடுப்புப் பிரிவு அந்த மோசடிச் சம்பவங்களை அடையாளம் கண்டது.
16லிருந்து 77 வயதுக்கு உட்பட்ட 81 பேர் விசாரணையில் தங்களுக்கு உதவி வருவதாகக் காவல்துறை தெரிவித்தது.
காதலர்களைத் தேட உதவும் இணையத்தளங்களின் வாயிலாக மோசடிக்காரர்கள், தங்களை நிதி நிபுணர்களாக மற்றவர்களிடம் அறிமுகப்படுத்திக்கொள்வதுண்டு.
அதன் பிறகு முதலீடு செய்ய பணத்தை வங்கிகளுக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்வார். பொதுவாக அத்தகைய வங்கிகள் ஹாங்காங் அல்லது சீனாவில் அமைந்திருக்கும்.
இவ்வாறு முதலீடு செய்யும்போது தொடக்கத்தில் ஒருவர் லாபம் பார்ப்பார். ஆனால், போகப்போக பெரிய தொகையை முதலீடு செய்யும்போது மோசடிக்காரர்களைத் தொடர்புகொள்ளமுடியாமல் போகும் எனக் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேபோல் காதலர்களைத் தேடிக்கொள்ள உதவும் இணையத்தளங்களின் வாயிலாக மோசடிக்காரர்கள் போலியான தளங்களில் பந்தயம் பிடிக்க ஒருவரை ஈர்ப்பார்.
போலியான சூதாட்டத் தளங்களில் பந்தயம் பிடிப்பதும் இணைய சூதாட்டச் சட்டத்தின்கீழ் தவறு எனக் காவல்துறை சுட்டியது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் 5,000 வெள்ளி வரை அபராதம், ஆறு மாதச் சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
அதே வேளையில், பிறரை ஏமாற்றிய குற்றம் நிரூபிக்கப்பட்டால் மோசடிக்காரருக்கு 10 ஆண்டு வரையிலான சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
கள்ளப் பணத்தை நல்லப் பணமாக மாற்றியது நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு 10 ஆண்டுச் சிறைத் தண்டனை, 500,000 வெள்ளி வரையிலான அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.