பாதுகாப்பு, நம்பிக்கை, இல்லம் போன்ற பள்ளிச்சூழல் உணர்வுகளை இழக்காமல் பள்ளிகளின் பாதுகாப்புத் தேவைகள் சமநிலைப்படுத்தப்படும் என்று கல்வி அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்துள்ளார்.
பள்ளிகளில் பாதுகாப்பை மேம்படுத்தும்போது, பள்ளிகளில் மாணவர்களுக்கும் பணியாளர்களுக்கும் கிடைக்கும் அனுபவத்தின் தரத்தில் எவ்விதச் சமரசமும் செய்துகொள்ள கல்வி அமைச்சு விரும்பவில்லை என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
பாதுகாப்பாக இருப்பது என்பது ஊடுருவல்மிக்க பாதுகாப்பு நடவடிக்கைகளில் இல்லை என்றும் முன்கூட்டியே தடுப்பதிலும் மேம்பட்ட சமூகக் கண்காணிப்பிலும்தான் உள்ளது என்று, ரிவர்வேலி உயர்நிலைப் பள்ளிச் சம்பவத்தைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இன்று (ஜூலை 27) அமைச்சர்நிலை அறிக்கையின்போது திரு சான் கூறினார்.
இம்மாதம் 19ஆம் தேதி, ரிவர் வேலி உயர்நிலைப் பள்ளிக் கழிவறையில் 16 வயது மாணவர் ஒருவர் கோடரியால் 13 வயது மாணவர் ஒருவரைக் கொன்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
அம்மாணவர்கள் இருவரும் ஒருவரையொருவர் முன்பின் அறிந்திருக்கவில்லை என்பதும் இணையம் வழியாக அக்கோடரி வாங்கப்பட்டது என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தன.
இதைத் தொடர்ந்து, பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக உள்ளனவா என்ற கேள்வி எழுந்தது.
பள்ளித் தலைவர்களுடன் கலந்துரையாடியபோது, பள்ளிகள் மாணவர்களுக்கு இரண்டாவது இல்லம் போன்றது என்று அனைவரும் ஒருமனதாக ஒத்துக்கொண்டதாக திரு சான் குறிப்பிட்டார்.
“பள்ளியானது விழுமியங்கள் விதைக்கப்படும் பாதுகாப்பான இடம். வாழ்நாள் உறவுகளை வளர்க்கும், பொதுவான அடையாளத்தை உருவாக்கும் ஓர் இடம். வெவ்வேறு கற்றல் தேவைகளையும் விருப்பங்களையும் கொண்ட மாணவர்கள் தங்களது பேரவாக்களைக் கண்டறியவும் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளவும் அனுமதிக்கும் ஒரு சௌகரியமான, ஆதரவான இடமாகப் பள்ளி திகழ்கிறது. எல்லாவற்றுக்கும் மேல், அது ஒரு நம்பிக்கையான இடம்,” என்றார் அமைச்சர்.
தடம் மாறிச்செல்ல வாய்ப்புள்ள அல்லது கவலையளிக்கக்கூடிய நடத்தைகளைக் கண்டறிவதிலும் நம்மிடையே காணப்படும் சாத்தியமுள்ள அச்சுறுத்தல்கள் குறித்துப் புகாரளிக்கவும் கூட்டாகப் பங்காற்ற வேண்டிய தேவையிருப்பதாக அவர் சொன்னார்.