தீவு விரைவுச்சாலையில் நேற்று புதன்கிழமை (அக்டோபர் 6) பிற்பகல் நிகழ்ந்த விபத்து ஒன்றில் காயமடைந்த 27 வயது மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
ஒரு வேன், இரண்டு கார்கள், ஒரு மோட்டார்சைக்கிள் ஆகியவை இந்த விபத்தில் சிக்கின.
சாங்கியை நோக்கிச் செல்லும் தோ பாயோ லோரோங் 2 வெளிச்சாலைக்கு முன்னால், வலப்புற சாலைத் தடத்தில் நிகழ்ந்த இந்த விபத்தைக் காட்டும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாகி வருகிறது.
அதில், பின்னால் இருந்து வந்த வேன் ஒன்று, மோட்டார்சைக்கிள்மீது மோதியது. இதனால், முன்னால் சென்றுகொண்டிருந்த கார்மீது அந்த மோட்டார்சைக்கிள் மோதியது.
இந்த விபத்து குறித்து பிற்பகல் 2.05 மணிக்கு தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாக போலிஸ் கூறியது.
“27 வயது ஆண் மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது அவர் சுயநினைவுடன் இருந்தார்,” என்று போலிஸ் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
விபத்து குறித்து போலிஸ் விசாரணை தொடர்கிறது.