செம்பவாங் கிரசென்ட்டில் உள்ள உடலுறுதிக் கூடத்தில் நேற்று முன்தினம் புதன்கிழமை (நவம்பர் 3) மாது ஒருவரின் தலையில் ஆடவர் ஒருவர் உதைத்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த மாது, அந்த ஆடவரின் மனைவி என நம்பப்படுகிறது.
புளோக் 363B செம்பவாங் கிரசென்ட்டில் அன்றிரவு 9.30 மணியளவில் உதவி கோரி அழைப்பு வந்ததாக போலிஸ் கூறியது.
இதில் சம்பந்தப்பட்ட அந்த 46 வயது மாதிடம் அந்த 48 வயது ஆடவர் மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதாகக் கூறப்பட்டது. திடீரென அந்த மாதின் தலையில் அந்த ஆடவர் உதைத்ததைக் கண்ட வழிப்போக்கர்கள், விரைந்து வந்து அந்த ஆடவரைத் தடுத்தனர்.
அருகிலுள்ள புளோக்கில் உள்ள வீடு ஒன்றில் அத்தம்பதி அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து வசித்து வந்ததாக நம்பப்படுகிறது.
அந்த வீட்டின் உரிமையாளர் திருமதி காய் என்பவர், இந்தச் சம்பவம் குறித்து ஷின் மின் சீன நாளிதழிடம் பேசினார். அன்றைய தினம் இரவு திருமதி காய் வீடு திரும்பியபோது, புளோக்கின் கீழ்த்தளத்தில் அந்த மாது உட்கார்ந்து இருந்ததைக் கண்டார்.
கணவர் தம்மை அடித்து துன்புறுத்தியதாக அந்த மாது திருமதி காயிடம் கூறினார்.
“நான் வீட்டிற்கு வந்தபோது, அந்த மாதின் கணவர் குடிபோதையில் இருந்ததைக் கவனித்தேன். அவரிடம் பேச நான் துணியவில்லை. இருவருக்கும் இடையே எப்படி சச்சரவு ஏற்பட்டது என்பது எனக்குத் தெரியாது,” என்றார் திருமதி காய், 50.
வீட்டிற்குக்கீழ் அந்த ஆடவர் சத்தத்துடன் பேசியதாக அண்டைவீட்டார் ஒருவர் கூறினார். ஆனால், அந்த ஆடவர் என்ன கூறினார் என்பது அந்த அண்டைவீட்டாருக்குச் சரியாக புரியவில்லை.
அந்த மாதை அந்த ஆடவர் தள்ளிவிட்டதையும் அந்த அண்டைவீட்டார் கண்டார்.
இந்நிலையில், அம்மாது இலேசாகக் காயமடைந்ததாகவும் ஆனாலும் மருத்துவமனைக்குச் செல்ல அவர் மறுத்துவிட்டதாகவும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறியது.
போலிஸ் விசாரணை தொடர்கிறது.