பணி ஓய்வுக்காலத்திற்கான மத்திய சேம நிதி அடிப்படைத் தொகை, 2023லிருந்து 2027வரையிலான ஐந்தாண்டுகளுக்கு, ஆண்டுக்கு 3.5 விழுக்காடு உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஐந்தாண்டில் 55 வயது பூர்த்தியாகும் மசே நிதி கழக உறுப்பினர்களுக்கு இது பொருந்தும்.
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவுகளைக் கருத்தில் கொண்டு, அவர்களது ஓய்வுக்காலத்தில் அதிகமான மாதாந்தர மசேநி வழங்குதொகைகளை அளிக்கும் பொருட்டு ஓய்வுக்கால அடிப்படைத் தொகை உயர்த்தப்படுவதாக நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங் கூறினார்.
இந்த ஆண்டு 55 வயது நிறைவடைவோருக்கு அடிப்படை ஓய்வூதியத் தொகை $96,000.
புதிய நடைமுறையின்கீழ், முறையே 2023ல் அது $99,400, 2024ல் $102,900, 2025ல் $106,500, 2026ல் $110,200 மற்றும் 2027ல் $114,100 ஆக இருக்கும்.
2027ல் அவ்வாறு தொகையை ஒதுக்கிவைக்கும் 55 வயது உறுப்பினருக்கு, அவரது 65ஆம் வயதில் இருந்து, வாழ்நாள் முழுவதும், மாதம் ஆயிரம் வெள்ளி வழங்குதொகை அளிக்கப்படும்.
இருப்பினும், அடிப்படை ஓய்வூதியத் தொகையை ஒதுக்க இயலாத உறுப்பினர்கள், மசே நிதிக் கணக்கில் கூடுதல்தொகை செலுத்தத் தேவையில்லை என்று அமைச்சர் வோங் கூறினார்.
55 முதல் 70 வயது நிறைவடைந்த ஊழியர்களுக்கு முதலாளி களும், ஊழியர்களும் செலுத்த வேண்டிய மசேநி பங்களிப்பு விகிதமும் தொடர்ந்து உயர்த்தப்படும் என்று நிதியமைச்சர் குறிப்பிட்டார்.
வயதான ஊழியர்களுக்கான முத்தரப்புப் பணிக்குழுவின் பரிந்துரைகளின்படி அது அமையும்.
ஏற்கெனவே இந்த ஆண்டு மசே நிதி பங்களிப்பு உயர்த்தப்பட்டதைச் சுட்டிய அமைச்சர், அதனை ஈடுகட்ட முதலாளி
களுக்கு ஓர் ஆண்டுக்கான அதிகரிப்பில் 50 விழுக்காட்டுத் தொகை நிதியுதவி அளிக்கப்பட்டதாகக் கூறினார். அடுத்த ஆண்டும் அத்தகைய உதவி தொடரும் என்றார் அவர்.
ஓய்வுக்காலத்திற்குத் தயாராகும் மூத்த சிங்கப்பூரர்களுக்குப் போதிய ஓய்வூதியத் தொகை இருக்கும் வகையில் அரசாங்கம் மேம்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாக நிதி அமைச்சர் சொன்னார்.