பெண்டமிர் ரோட்டில் ஓர் ஆடவர் கத்தி ஏந்திய நிலையில் கூச்சல் போட்டுக்கொண்டிருந்ததாக சிங்கப்பூர்க் காவல் துறைக்கு இன்று மாலை சுமார் 4 மணியளவில் அழைப்பு கிடைத்தது.
புளோக் 33 பெண்டமிர் ரோட்டுக்கு விரைந்த காவல் துறை அதிகாரிகள் ஒரு வீட்டிலிருந்து அந்த 64 வயது ஆடவர் கத்தி ஏந்திய நிலையில் வெளியே வந்ததாகக் கூறினர்.
கத்தியைக் கீழே போடும்படி பலமுறை அதிகாரிகள் வலியுறுத்தியும், அவ்வாறு செய்ய அவர் மறுத்துவிட்டார். கத்தியைப் பிடித்துக்கொண்டு அதிகாரிகளை நோக்கி அவர் வந்ததாகக் கூறப்பட்டது. ஆடவரைத் தடுக்க அவரை நோக்கி காவல் துறை டேசர் துப்பாக்கியால் மூன்று முறை சுட்டது. இருப்பினும் ஆடவர் தொடர்ந்து அதிகாரிகளை நோக்கி படியெடுத்து வைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அச்சமயத்தில் அவர்களின் உயிருக்கு ஆபத்து இருக்கும் என்று கருதி, ஒரு அதிகாரி தம்முடைய துப்பாக்கியால் அவரைச் சுட்டார். ஆடவர் தரையில் விழுந்ததாகவும், அவருடைய நெஞ்சுப் பகுதியில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்ததாகவும் காவல் துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மயக்க நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். மாலை சுமார் 5 மணியளவில் அவர் மாண்டார்.
முதல்கட்ட விசாரணையில் மாண்ட ஆடவர் கத்தியைப் பிடித்துக்கொண்டு தாம் வசித்த புளோக்கில் மேலும் கீழும் நடந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
மாண்ட நபர் போதைப்பொருள் புழங்கி என்றும் அவரை போதைப் பொருள் ஒழிப்புப் பிரிவு தேடி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. அவரது வீட்டில் போதைப் பொருள் பயன்படுத்தும் கருவி இருந்ததாகக் கூறப்பட்டது.
மாண்டவருக்கு எதிராக சில குற்றச்சாட்டுகளும் இருக்கின்றன. வீட்டு சன்னல் இருந்து பொருள்களைத் தூக்கி எறிந்ததற்காக அதிகாரிகள் அவரை விசாரிக்க முயன்றபோது, ஒரு அதிகாரியை நற்காலியால் அடித்தாகக் காவல் துறை தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்து காவல் துறை விசாரித்து வருகிறது.