சாங்கி விமான நிலையம் வழியாக ஸ்பெயினிலிருந்து ஆஸ்திரேலியாவுக்குப் பயணம் செய்த ஒருவருக்குக் குரங்கம்மை தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பார்சிலோனாவிலிருந்து வந்த அந்த இடைமாற்று பயணி சிங்கப்பூர் வழியாக ஆஸ்திரேலியாவுக்கு ஜூன் 2ஆம் தேதி பயணம் செய்தார்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரைச் சென்றடைந்த அடுத்த நாள் அவருக்குக் குரங்கம்மை தொற்று உறுதியானது.
பாதிக்கப்பட்டவர் சாங்கி விமான நிலையத்தின் பயணிகள் இடைமாற்று பகுதியைத் தவிர்த்து விமான நிலையத்தின் மற்ற இடங்களுக்குச் செல்லவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். அதோடு மற்றவர்களுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இல்லை என்றும் கூறப்பட்டது. இதனால் சமூக அளவில் தொற்று பரவக்கூடிய சாத்தியம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்தது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தொற்றுள்ளவருடன் தொடர்பில் வந்தவர்கள், பாதிக்கப்பட்ட இரண்டு விமானங்களில் பயணம்
செய்தவர்கள் ஆகியோருடன் தொடர்புத் தடங்கள் கண்டறியப்பட்டன. பாதிக்கப்பட்டவருடன் எவருக்கும் நெருங்கிய தொடர்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் வந்த 13 பேருடைய உடல்நலன் தொலைபேசி வழியாகக் கண்காணிக்கப்பட்டுவருகிறது. 21 நாள்களுக்கு அவர்களின் உடல்நலன் கண்காணிக்கப்படும்.
சென்ற ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 780 குரங்கம்மை தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.