புக்கிட் பாத்தோக் வட்டாரத்தில் வெவ்வேறு இடங்களில் 84 வயது முதியவர் ஒருவரும் அவரது 14 வயது பேத்தியும் மாண்ட நிலையில் காணப்பட்டனர்,
புக்கிட் பாத்தோக் அவென்யூ 6ல் உள்ள ஒரு புளோக்கின் அடித்தளத்தில் சிறுமியின் உடல் கண்டறியப்பட்டது. இது குறித்து ஜூன் 23 அன்று மாலை 5.50 மணியளவில் காவல் துறைக்கு அழைப்பு வந்தது. சில நிமிடங்கள் கழித்து முதியவர் ஒருவர் மாண்ட நிலையில் இருப்பது குறித்து காவல் துறைக்கு மற்றொரு அழைப்பு கிடைத்தது.
புக்கிட் பாத்தோக் ஸ்ட்ரீட் 31ல் ஒரு வீட்டில் முதியவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. முதியவரின் நெஞ்சில் காயங்கள் இருந்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
சிறுமியின் சடலம் காணப்பட்ட இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் முதியவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி முதியவரின் பேத்தி என்றும் இருவரும் ஒரே வீட்டில் வசித்துவந்ததாகவும் கூறப்பட்டது.
முதியவரின் மரணம் இயற்கைக்கு மாறானது என காவல் துறை வகைப்படுத்தியுள்ளது.
இரு மரணங்களுக்கு இடையே சம்பந்தம் இருக்கிறதா என்று காவல் துறை விசாரித்துவருகிறது.