சிங்கப்பூரில் வசிக்கும் மற்றோர் இந்திய ஆடவருக்குக் குரங்கம்மைத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்வழி, ஜூன் மாதத்திலிருந்து இங்கு நான்கு பேருக்குக் குரங்கம்மை தொற்றியிருக்கிறது.
குரங்கம்மை தொற்றிய அந்த 30 வயது இந்தியக் குடிமகன் சிங்கப்பூரில் வசித்து வருகிறார்.
அந்த நபருக்கு வெளிநாட்டில் குரங்கம்மை தொற்றியதாக சுகாதார அமைச்சு வெள்ளிக்கிழமை (ஜூலை 8) அன்று தெரிவித்தது.
அண்மையில்தான் அவர் ஜெர்மனியிலிருந்து சிங்கப்பூர் திரும்பினார்.
ஜூன் 30ஆம் தேதி. வயிரும் தொடையும் சேருமிடத்தில் அவருக்கு வேனற்கட்டி ஏற்பட்டது.
வியாழக்கிழமை காய்ச்சல் ஏற்பட்டதால் அவர் மருத்துவரைச் சென்று பார்த்தார்.
சிங்கப்பூரில் இந்த வாரம் மட்டும் மூன்று குரங்கம்மை தொற்றுச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டன.
வியாழக்கிழமை (ஜூலை 7) அன்று அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஒருவருக்கு குரங்கம்மை தொற்று இருப்பது உறுதியானது.
அந்த 36 வயது இந்தியக் குடிமகன் சிங்கப்பூரில் வசிப்பவர். அந்த ஆடவரிடம் முதன்முதலில் ஜூன் 28 அன்று தொற்று அறிகுறிகள் தென்பட்டன.
சிங்கப்பூரில் முதல் உள்ளூர் குரங்கம்மைத் தொற்று புதன்கிழமை (ஜூலை 6) அன்று பதிவானது.
பாதிக்கப்பட்டவர், சிங்கப்பூரில் வசிக்கும் 35 வயது மலேசியக் குடிமகன் ஆவார்.
உள்ளூரில் குரங்கம்மை தொற்றியவரின் நெருக்கமான தொடர்புகள் 21 நாள்கள் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிங்கப்பூரில் பதிவான நான்கு குரங்கம்மைத் தொற்றுச் சம்பவங்களுக்கும் தொடர்பில்லை என்று சுகாதார அமைச்சு கூறியது.