உள்ளூரில் முதல் குரங்கம்மை தொற்று சம்பவம் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் வசிக்கும் 45 வயது மலேசிய ஆடவரிடம் நேற்று (6 ஜூலை) குரங்கம்மை நோய்த்தொற்று அறிகுறிகள் காணப்பட்டதாகச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அவர் தற்போது தேசிய தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று சீரான நிலையில் உள்ளதார்.
அந்த ஆடவருக்கும் சிங்கப்பூரில் கடந்த மாதம் 21-ஆம் தேதி குரங்கம்மை இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட மற்றொரு ஆடவருக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
மலேசிய ஆடவரிடம் முதன்முதலில் கடந்த வியாழக்கிழமை (30 ஜூன்) அறிகுறிகள் தென்பட்டன. அவரது கீழ் வயிற்றுப் பகுதியில் தோலில் காயங்கள் தென்பட்டதைத் தொடர்ந்து ஜூலை 4ஆம் தேதி அவருக்கு காய்ச்சல், தொண்டை வலி போன்ற அறிகுறிகளும் தெரிந்தன.
மருத்துவ ஆலோசனையை அணுகிய அவரிடம் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அவருடன் நெருங்கிய தொடர்பு உள்ள மூவர் புதன்கிழமை அன்று அடையாளம் காணப்பட்டனர். தொற்றால் பாதிக்கப்பட்ட மலேசிய ஆடவருடன் நெருங்கிய தொடர்புடையவர்கள் 21 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.