சிங்கப்பூர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் மலேசிய மன்னர் சுல்தான் அப்துல்லா அகமது ஷாவை இன்று சந்தித்தார். இரு நாடுகளும் கொண்டுள்ள அணுக்கமான உறவை இருவரும் மறுஉறுதிப்படுத்திக்கொண்டனர்.
இருவரும் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் கலந்துரையாடியதாக மலேசியாவின் பெர்னாமா செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.
இருநாட்டு மக்களுக்கிடையே நிலவும் வலுவான உறவு, இருநாடுகளையும் இணைக்கும் வரலாறு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டுள்ளது இருதரப்பு உறவு என்று திரு வோங் சொன்னதாக பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இம்மாதம் 19ஆம் தேதியன்று மலேசிய மன்னர் சிங்கப்பூருக்கு வருகையளிக்கவிருக்கிறார். அவரை வரவேற்க சிங்கப்பூர் ஆவலாக இருப்பதாக திரு வோங் கூறியுள்ளார்.
நான்கு நாள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டு திரு வோங் மலேசியா சென்றுள்ளார். ஜூன் மாதம் துணைப் பிரதமர் பதவியை ஏற்றுகொண்ட பிறகு திரு வோங் மலேசியாவுக்கு அதிகாரபூர்வமாக சென்றிருப்பது இதுவே முதல்முறை.