சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (சிண்டா) ஆண்டுதோறும் நடத்திவரும் ‘புரோஜெக்ட் கிவ்’ நன்கொடைத் திட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் நோக்கில் பல்வேறு அமைப்புகளும் குழுக்களும் முன்வந்துள்ளன. முதல்முறையாக 18 இந்திய முஸ்லிம் அமைப்புகளும் இணைந்து நிதி ஆதரவு வழங்கிக் கைகொடுத்துள்ளன.
இந்திய முஸ்லிம் பேரவை
சிண்டாவின் உன்னத நோக்கத்தை இந்திய முஸ்லிம் பேரவை அடையாளம் கண்டு, இந்தியர்களுக்கான நிதி, சமூக தேவைகளுக்குத் தாங்களும் பங்காற்ற வேண்டுமென்று, இந்திய முஸ்லிம் அமைப்புகளிடமிருந்து மொத்தம் $10,858 பணத்தைத் திரட்டியுள்ளது.
இந்திய மரபுடைமை நிலையத்தில் சனிக்கிழமை மாலை நடந்தேறிய இந்த நிகழ்வில், சிண்டாவின் தலைமை நிர்வாக அதிகாரி திரு அன்பரசு ராஜேந்திரன், இந்திய முஸ்லிம் பேரவையின் தலைவர் முஹம்மது பிலால், அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஒவ்வோர் அமைப்பின் நன்கொடையையும் பெற்ற திரு அன்பரசு ராஜேந்திரன், “நம் சமுதாயத்தில் பலரும் வெவ்வேறு சூழலில் வாழ்கிறார்கள். இந்திய முஸ்லிம் அமைப்புகள் எங்களுக்கு தரும் இந்த நன்கொடை, மிகவும் வரவேற்கத்தக்கது. ஒவ்வோர் இந்திய சிங்கப்பூரரும் எவ்வித சிக்கலிலிருந்தும் விடுபட இந்த நிதி உதவும். சமுதாயத்திற்குப் பங்களிக்கவேண்டுமென்ற அந்த எண்ணத்திற்கு நான் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்,” என்றார் அவர்.
“தீபாவளி மட்டுமின்றி, குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்தோர் விழாக்காலத்தை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என்பதற்கு எங்கள் ஆதரவை நாங்கள் வழங்கியுள்ளோம். அதோடு குறைந்த வருமானம் அல்லது கல்வியில் பின் தங்கியுள்ள இந்திய முஸ்லிம் மாணவர்கள் சிண்டாவை அணுகுவதற்கு அவர்களுக்கும் சிண்டாவுக்கும் இடையே ஒரு பாலமாகவும் செயல்படுகிறோம்,” என்று உறுதிபடக் கூறினார் திரு முஹம்மது பிலால்.
வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு
சிண்டாவின் ‘புரோஜெக்ட் கிவ்’ திட்டத்திற்காக வெஸ்ட் கோஸ்ட் சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு, குடியிருப்பாளர்கள், அடித்தள தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோரிடமிருந்து திரட்டப்பட்ட பணம் கடந்த புதன்கிழமையன்று திட்டத்துக்கான மையத்தில் காசோலையாக வழங்கப்பட்டது.
சமூக ஆலோசனைக் குழுவின் தலைவர் திரு சேமுவல் டெங், வெஸ்ட் கோஸ்ட் இந்தியர் நற்பணி செயற்குழுவின் தலைவர் திரு நசீர் கனியுடன் முனைவர் டி. சந்துரு இணைந்து சிண்டாவின் தலைமை அதிகாரி திரு அன்பரசுவிடம் காசோலையை வழங்கினர்.
அவர்களுடன் வெஸ்ட் கோஸ்ட் இந்தியர் நற்பணி செயற்குழு உறுப்பினர்கள், குடியிருப்பாளர்கள் என பதினைந்து பேர் இணைந்து புரோஜெக்ட் கிவ் மையத்துக்கு வருகை புரிந்திருந்தனர். ஏறத்தாழ பத்தாண்டு காலமாக புரோஜெக்ட் கிவ் திட்டத்திற்கு நன்கொடை அளித்துவரும் வெஸ்ட் கோஸ்ட் இந்தியர் நற்பணி செயற்குழு, நோய்த்தொற்றுக்குப் பின்னர் நேரடியாக மையத்துக்கு வருகை புரிந்திருந்தது.
“தீபாவளியின்போது, வசதிகுறைந்த குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதை முக்கியமாகக் கருதுகிறோம். குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கும் நிதி தேவைப்படுவோருக்கும் இவ்வாண்டின் தீபாவளிக் கொண்டாட்டம் மனநிறைவளிப்பதாக அமைய இது ஒரு வாய்ப்பு,” என்றார் திரு நசீர் கனி, 64.