முதியோர் தங்களின் உடல்நிலையைத் தாங்களே கண்காணித்துக்கொள்ள வழிகாட்டுதல் பெறுதல், சரக்கு வாகன விநியோகச் சேவைகளில் நீடித்த நிலைத்தன்மையைக் கூட்டுதல் முதலிய சூழல்களை நவீன மின்னிலக்கத் தீர்வுகள் சாத்தியமாக்கி உள்ளன.
இத்தகைய மின்னிலக்கத் தீர்வுகள் மக்களையும் வர்த்தகங்களையும் கடந்த ஆண்டுகளாக சென்றடைந்துள்ளன.
அவற்றை அங்கீகரிக்கும் வகையில் சிங்கப்பூர் கணினிச் சங்கத்தின் 55வது நிறைவு ஆண்டுக் கொண்டாட்டம் அமைந்தது.
இம்மாதம் 5ஆம் தேதி ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற இக்கொண்டாட்டத்தில் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். தொடர்பு, தகவல் அமைச்சரும் உள்துறை இரண்டாம் அமைச்சருமான ஜோசஃபின் டியோவும் உடன் பங்கேற்றார்.
கொவிட்-19 காலத்தில் மருத்துவப் பராமரிப்பு தொடர்பில் ஏற்பட்ட ஏராளமான சிக்கல்களைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது, ‘ஹெல்த் டிஸ்கவரி+’ செயலி.
இதனைத் தயாரித்த ‘ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்புத் தகவல் கட்டமைப்புக்கு’ (ஐஎச்ஐஎஸ்) மின்னிலக்கச் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.
பெரும்பாலும் 50 வயதுக்கும் 65 வயதுக்கும் இடைப்பட்டோர் பயன்படுத்தும் இச்செயலி, 2021ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
ரத்த அழுத்தம், ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு போன்ற உடல்நல அம்சங்களைக் கண்காணிக்கச் செயலி உதவும். அபாய நிலையை இவை எட்டும்போது செயலி தாமாகவே எச்சரிக்கை விடுத்து மருத்துவ உதவி நாட வகைசெய்யும்.
இதனால் முதியவர்கள் வீட்டில் இருந்தபடியே அவர்களின் உடல்நிலையைத் தாதியர் கண்காணிக்கலாம்.
10,000க்கும் மேற்பட்ட நபர்களை இச்செயலி சென்றடைந்துள்ளது.
“சுகாதார ஊழியர்களின் பணியை எளிதாக்குவதுடன் உடல்நலம் தொடர்பான சுதந்திரத்தைப் பயனாளர்களுக்கு வழங்க முற்படுகிறது இச்செயலி.
“சுகாதார அமைப்புகளின் ஆக்கத்தைக் கூட்டுவது பரபரப்பான வாழ்வியல் சூழலில் அவசியமாகி உள்ளது,” என்றார் ஐஎச்ஐஎஸ் நிறுவனத்தில் தலைமை மென்பொருள் பொறியாளராக உள்ள திரு யோகப்பிரகாஷ் குமார், 34.
‘ஒப்ட்இடிரக்’ எனும் மின்னிலக்கத் தீர்வை வடிவமைத்த பிஎஸ்ஏ நிறுவனமும் மின்னிலக்கச் சாதனையாளர் விருதைப் பெற்றது.
வளங்களைச் சரிவர திட்டமிடாத காரணத்தால் விநியோகச் சரக்கு வாகனம் ஒன்று ஒரு நாளில் குறைந்தபட்சம் மூன்று முறையாவது எதையும் ஏற்றிச் செல்லாமல் வெறுமனே பயணிக்கிறது.
சுற்றுச்சூழலின் நலன் கருதி இச்சிக்கலைக் களைய ஒப்ட்இடிரக் முற்படுகிறது.
இடம்பெயர்க்க வேண்டிய சரக்குகளைத் தேவைக்கேற்ப பொருத்தமான லாரிகளுடன் இணைக்கும் மின்னிலக்கச் சேவையை ஒப்ட்இடிரக் வழங்குகிறது.
தேவையற்ற வாகனப் பயணங்கள் கரியமிலத் தடத்தை அதிகரிக்கிறது என்று கூறிய பிஎஸ்ஏ நிறுவனத்தின் உதவித் துணைத் தலைவர் திரு ஸ்ரீராம் ராமானுஜம், இத்துறையை மின்னிலக்கமயமாக்குவது அவசியம் என வலியுறுத்தினார். மேலும், ஒப்ட்இடிரக் இதுவரை ஏறத்தாழ 2,000 தேவையற்ற வாகனப் பயணங்களைக் குறைத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் சிங்கப்பூர் பொருளியலின் முக்கிய அங்கமாக தொழில்நுட்ப, தகவல் தொடர்பு பிரிவுகள் விளங்குகின்றன என்று துணைப் பிரதமர் வோங் வலியுறுத்தியுள்ளார்.