சிங்கப்பூரின் சிறந்த அரசாங்கச் சேவை காரணமாக அனுபவமிக்க அல்லது திறமையான அமைச்சர் தேவையில்லை என்ற வாதம் ‘பைத்தியக்காரத்தனமானது’ என்று பிரதமர் லீ சியன் லூங் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 5) தெரிவித்தார்.
இவ்வாண்டின் மக்கள் செயல் கட்சி (மசெக) மாநாட்டில் பேசிய கட்சியின் தலைமைச் செயலாளர் திரு லீ, எதிர்வரும் தலைமைத்துவ மாற்றம் குறித்து உரையாற்றினார்.
71 வயதாகும் திரு லீ, அடுத்த பொதுத் தேர்தல் வருவதற்கு முன்னர் துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங்கிடம் தலைமைத்துவத்தை ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார்.
திறமையுடன் ஆட்சிசெய்வது, ஊழலற்ற செயல்பாடு, தேர்தலில் வெற்றி பெறுவது ஆகியவை கட்சியின் முன்னுரிமைகள். இதற்கு உயர் தரமான தலைமைத்துவம் தேவை என்றார் திரு லீ.
சிங்கப்பூரர்களுடன் தொடர்பில் உள்ள வலுவான, திறமையான அணியைக் கட்சி கொண்டுள்ளது. தன்னால் என்ன செய்ய முடியும் என்பதை அந்த அணி நிரூபித்துள்ளது என்றார் அவர்.
சிங்கப்பூரின் பொதுச் சேவை சிறந்து விளங்குகிறது. நல்ல அரசியல் தலைமை அதைக் கட்டியெழுப்பியது என்பதே அதற்குக் காரணம் என்று திரு லீ கூறினார்.
“அரசாங்க ஊழியர்கள் சிறந்தவர்கள். ஆனால், பிரச்சினைகளைப் புரிந்து, தகுந்த முடிவுகளை எடுக்கும் அவர்களின் மரியாதையைப் பெற்ற திறமையான அமைச்சர்களால் அவர்கள் வழிநடத்தப்படுவதாலேயே அவர்கள் சிறந்த சேவையை வழங்குகிறார்கள்,” என்று திரு லீ கூறினார்.
அமைச்சர்கள், அரசாங்க ஊழியர்களுக்கு வழிகாட்டி, தங்களது அரசியல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும் என்று ஆற்றல்மிக்க இசைக்குழுவையும் அதன் நடத்துனரையும் ஒப்பிட்டு விளக்கினார்.
“அரசியல் தலைவர்கள் சாதாரணமானவர்களாக இருந்தால், சாதாரண பொதுச் சேவையையே பெறுவீர்கள். சிங்கப்பூர் மிகவும் சாதாரண நாடாக மாறும்.”
“சிங்கப்பூர் அதன் தனிச்சிறப்பை இழந்து, தனித்து நிற்க முடியாது போனால் நாடு மூழ்கி விடும்.
எனவே தலைமைத்துவப் புதுப்பிப்பு கட்சிக்கும் சிங்கப்பூருக்கும் முக்கியமானது என்று பிரதமர் லீ கூறினார்.