ஈராண்டுக்கு ஒருமுறை நடைபெறும் மக்கள் செயல் கட்சியின் மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமையன்று பிரதமர் லீ சியன் லூங் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு பேசியிருந்தார்.
பிரதமர் லீ, “முதலில் சிங்கப்பூர் ஆயுதப் படை, பிறகு கட்சி, அதையடுத்து அரசாங்கம் என என் வாழ்க்கை முழுக்க நாட்டுக்காகச் சேவையாற்றும் அரும்பெரும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, எனது வாய்த்த அதிர்ஷ்டம்,” என்றார்.
பின்னர், குரல் தழுதழுத்த நிலையில் தம்மைச் சுதாரித்துக்கொள்ள பேச்சை நிறுத்திவிட்டார் திரு லீ. மண்டபத்தில் கூடியிருந்த கட்சி உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரம் செய்து அவருக்கு உற்சாகமூட்டினர்.
தொடர்ந்து பேசிய திரு லீ, தாம் பிரதமராகப் பொறுப்பேற்றிருந்த சுமார் 20 ஆண்டுகாலத்தில் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியும் முழுமையாக உருமாறியிருப்பதைச் சுட்டினார்.
“சில அம்சங்கள் மாறாது. நாம் தொடர்ந்து சிங்கப்பூருக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறோம். மக்களுக்குச் சேவையாற்றும் பொறுப்பை இன்னமும் நாங்கள் உணர்கிறோம். எதிர்காலச் சந்ததியினருக்காக இந்த நாட்டைப் பாதுகாக்க நாங்கள் இன்னமும் கடமைப்பட்டிருக்கிறோம்.
“என் தலைமையில் இவையாவும் மாறவில்லை. 4ஜி தலைமைத்துவத்தின் கீழும் மாறாது. லாரன்சுக்கும் அவரின் குழுவுக்கும் உங்களின் முழு ஆதரவைத் தருமாறு உங்கள் ஒவ்வொருவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் வெற்றிபெறுவதற்கு வலுவான உரிமையைத் தந்து உதவுங்கள். சிங்கப்பூர் மேன்மேலும் உயர்வை எட்டுவதற்கு அவர்களுடன் இணைந்து செயல்படுங்கள்,” என்று அறைகூவல் விடுத்தார் பிரதமர் லீ.