தேசிய நூலக வாரியத்துடன் இணைந்துள்ள தொண்டூழியர்களின் எண்ணிக்கை கடந்தாண்டு இரு மடங்காக உயர்ந்திருப்பதாக வாரியம் தெரிவித்துள்ளது. 2021ல் 2,000ஆக இருந்த தொண்டூழியர் எண்ணிக்கை 2022ல் 4,230க்கு உயர்ந்ததாக வாரியம் கூறியது.
தொண்டூழியர்களைப் பாராட்டுவதற்கான வருடாந்திர விருந்து ஒன்றை தேசிய நூலக வாரியம் புதன்கிழமை (நவம்பர் 8) மாலை கரையோரப் பூந்தோட்டங்களில் நடத்தியபோது அந்தத் தகவல் அறிவிக்கப்பட்டது. நூலக வழிகாட்டிகள் உள்ளிட்ட வழக்கமான தொண்டூழியப் பணிகளுக்கும் மேலாக, புத்தாக்கத் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டிருப்பதாகவும் நூலக வாரியம் கூறியது.
மன இறுக்கம் அல்லது கற்றல் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கான கதைசொல்லும் சிறப்பு அங்கங்களில் பயன்படுத்தப்படும் தொட்டுணர்வுள்ள, புலன்சார்ந்த கருவிகளை அமைப்பதற்குத் தொண்டூழியர்கள் கைகொடுத்தனர்.
நூலகங்களில் உடற்குறையுள்ளோருக்கான பாதுகாப்பு இடங்களான ‘காம் போட்’ பகுதிகளில் இந்தக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
நூலக வாரியத்தின் ஏற்பாட்டில் அண்மையில் நடந்தேறிய ‘டெக் பசார்’ எனப்படும் தொழில்நுட்பச் சந்தையில் அதிநவீன தொழில்நுட்பங்களை முதியவர்கள் தொண்டூழியர்களுக்குக் கற்றுக்கொடுத்தனர்.
2026ஆம் ஆண்டுக்குள் 6,500 பேரைச் சேர்க்கவேண்டும் என்ற நோக்குடன் செயல்படும் தேசிய நூலக வாரியம், கட்டங்கட்டமாகப் புதிய திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. தேசிய நூலக வாரியத்தின் சேவைகளைப் பற்றி வருகையாளர்களுக்கு விளக்கம் தருவது, நூலகச் சுற்றுலாக்களை நடத்துவது போன்றவை இந்தத் திட்டங்களில் அடங்கும்.
தொண்டூழியர்கள் காட்டிய வலுவான கடப்பாட்டினால் அகமகிழ்வதாக தேசிய நூலக வாரியத்தின் தமிழ்மொழிச் சேவைகள் பிரிவின் தலைவர் து. அழகிய பாண்டியன் தமிழ் முரசிடம் தெரிவித்தார்.
“வாசகர்களின் வாசிப்பு, கற்றல் அனுபவங்களுக்குச் செறிவூட்ட முனையும் நபர்களாகவும் அமைப்புகளாகவும் செயலாற்றும் தொண்டூழியர்களையும் நாங்கள் வரவேற்கிறோம்,” என்று திரு அழகிய பாண்டியன் கூறினார்.
நிகழ்ச்சியின் மூலம் அங்கீகாரம் பெற்றது குறித்து மகிழ்ச்சியுடன் இருப்பதாக மாதந்தோறும் தெம்பனிஸ் நூலகத்தில் சேவையாற்றும் பணித்திட்ட நிர்வாகி முதலியப்பன் சுடர்மொழி, 32, தெரிவித்தார்.
தொண்டூழியர்களுக்கு நூலகம் தரும் ஆதரவு, பாராட்டத்தக்க விதத்தில் இருப்பதாக மென்பொருள் நிபுணரும் மற்றொரு தொண்டூழியருமான சுப்ரமணியன் கல்யாண்குமார், 42, கூறினார்.
நூலக வாரியத்துடன் தொண்டூழியத்தில் ஈடுபட ஆர்வமுள்ளோர் https://go.gov.sg/volunteerwithctpl என்ற தளத்தில் பதிவுசெய்யலாம்.
கூடுதல் செய்தி: லோகஷிவாணி ஜெகநாதன்