லிட்டில் இந்தியாவில் மாபெரும் உணவு விழா

லிட்டில் இந்தியாவில் மாபெரும் உணவு விழா

2 mins read
30fb477a-74f6-4aab-9761-01a791faa1b5
உணவுத் திருவிழாவின் அதிகாரபூர்வ தொடக்க விழாவில் கலந்துகொண்ட மனிதவள அமைச்சர். - படம்: டினேஷ் குமார்
multi-img1 of 3

இந்திய உணவு வகைகளின் மரபைக் கட்டிக்காக்கும் விதமாக மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கத்தோடு கைகோத்து, இந்திய உணவகங்களில் பணியாற்றும் சமையல் வல்லுநர்களைத் தொழில்துறை சாரா வேலைப்பட்டியலில் சேர்த்துக்கொள்ள முடிவெடுத்துள்ளது.

சிங்கப்பூரிலுள்ள இந்திய உணவகங்கள் இனிமேல் இந்தியா, பங்ளாதேஷ் மற்றும் இலங்கையிலிருந்து வரும் சமையல் வல்லுநர்களை பணியில் அமர்த்தலாம். இந்தப் புதிய திட்டம் மூலம் 400க்கும் மேற்பட்ட இந்திய உணவகங்கள் பயன்பெறும்.

கொவிட்-19 தொற்றுப் பரவலின்போது பல உணவகங்களின் தொழில் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், “புதிய திட்டம் வாயிலாக அவர்கள் மேலும் அதிகமான ஊழியர்களை பணிக்கு எடுத்து உணவு விநியோகத்தில் கவனம் செலுத்தலாம்,” என்று மனிதவள அமைச்சர் டான் சீ லெங் நம்பிக்கை அளித்துள்ளார்.

மேலும், சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கமும் ‘லிஷா’ எனப்படும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கமும் தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதால், லிட்டில் இந்தியா வட்டாரம் தனது அழகையும் மரபையும் கட்டிக்காத்து ‘கூலஸ்ட் அக்கம்பக்கம்’ எனும் அங்கீகாரத்தை சென்ற ஆண்டு பெற முடிந்தது என்பதை பாராட்டினார் அமைச்சர்.

நவம்பர் 27ஆம் தேதி தொடங்கிய மாபெரும் இந்திய உணவு விழாவை வெள்ளிக்கிழமை மாலை டாக்டர் டான் அதிகாரபூர்வமாகத் தொடங்கிவைத்தார்.

கொவிட்-19 பரவல் காரணத்தால் மூவாண்டுகளுக்கு தள்ளிப்போன உணவுத் திருவிழா இவ்வாண்டு ‘ஒவ்வொரு மசாலாவுக்கும் ஒரு கதை உள்ளது’ என்ற கருப்பொருளுடன் திரும்பியுள்ளது.

பொதுமக்கள் இம்மாதம் 10ஆம் தேதி வரையில் லிட்டில் இந்தியாவின் பர்ச் சாலையில் நடைபெற்று வரும் உணவு விழாவில் கலந்துகொண்டு மகிழலாம்.

சிங்கப்பூர் இந்திய உணவகங்கள் சங்கம் பல பங்குதாரர்களுடன் ஒன்றுசேர்ந்து ஏற்பாடு செய்துள்ள திருவிழாவில் புதிய முயற்சியாக இம்முறை மக்கள் விரும்பிச் சுவைக்கும் உணவு வகைகளான ஆப்பம், பிரியாணி போன்றவற்றைத் தள்ளுவண்டிக் கடைகளில் எதிர்பார்க்கலாம்.

ஆடல் பாடலுடன் களைகட்டிய விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் கழைக்கூத்து சாகசம் புரிந்தனர்.

வசந்தம் தொலைக்காட்சிப் பாடகர்கள் இசை விருந்து படைத்தனர்.

உணவு விழா ஒவ்வொரு நாளும் காலை 10 மணிக்குத் தொடங்கி இரவு 10 மணிக்கு நிறைவுபெறும்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.greatindianfood festival.com/ இணையத்தளத்தை நாடலாம். அனுமதி இலவசம்.

குறிப்புச் சொற்கள்