சிங்டெல் நிறுவனத்தின் கைப்பேசி இணையச் சேவையைப் பயன்படுத்துவதில் சனிக்கிழமை (டிசம்பர் 9) காலை ஆயிரக்கணக்கானோர் சிரமப்பட்டதைத் தொடர்ந்து, அச்சேவை வழக்கநிலைக்குத் திரும்பியது.
இதுகுறித்து விளக்கமளித்த சிங்டெல், “இன்றைய தினம் காலையில் எங்களுடைய வாடிக்கையாளர்களில் பலர் அவர்களது கைப்பேசி இணையச் சேவையைப் பயன்படுத்துவதில் அவ்வப்போது சிரமப்பட்டனர்.
“சிரமத்துக்காக நாங்கள் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். இதில் வாடிக்கையாளர்களின் பொறுமைக்காக நன்றி கூறுகிறோம்,” என்றது.
சேவைத் தடையைக் கண்காணிக்கும் ‘டௌன்டிட்டெக்டர்’ இணையப்பக்கத்திற்கு காலை 6.04 மணிக்கு பயனாளர்களிடம் இருந்து புகார் வரத் தொடங்கியது. இரண்டு மணி நேரத்தில் புகார்களின் எண்ணிக்கை 1,231ஐ எட்டியது.
பயனாளர்களில் 76 விழுக்காட்டினர், சிங்டெலின் கைப்பேசி இணையச் சேவையைப் பயன்படுத்துவதில் தாங்கள் சிரமம் எதிர்நோக்கியதாகக் குறிப்பிட்டனர். சமிக்ஞை தொடர்பில் பிரச்சினை ஏற்பட்டதாக 19 விழுக்காட்டினர் கூறினர்.
இந்நிலையில், காலை 8.17 மணிக்கெல்லாம் சேவை வழக்கநிலைக்குத் திரும்பியதாக சிங்டெல் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.