அக்கம்பக்கத்தினர் இணைந்து பங்குபெறும் கொண்டாட்டம் என்றாலே மதியிறுக்க மாணவர்களுக்கு ஆசிரியராகப் பணியாற்றும் சாந்தா ராமனுக்கு, 53, பூரிப்பு.
நீ சூன் சென்டர் வட்டாரத்தின் வட்டாரவாசி தொடர்பு வட்டத் தலைவராகவும் செயல்படும் திருவாட்டி சாந்தா, அங்குள்ள பொங்கல், தீபாவளி, கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டில் தொடர்ச்சியாகப் பங்காற்றிவருபவர். ஈசூன் குழுத்தொகுதி அளவில் ஞாயிற்றுக்கிழமை ( டிசம்பர் 31) முதன்முறையாக நடைபெற்ற புத்தாண்டு வரவேற்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் இவரும் ஒருவர்.
வட்டாரவாசிகள் ஒருவரோடு ஒருவர் பழகி நலம் விசாரிக்கும் வாய்ப்பை இத்தகைய பொது நிகழ்ச்சிகள் வழங்குவதாக இவர் கூறுகிறார்.
“தனிமையில் இருக்கும் பலரை நாங்கள் அழைத்து சமூகத்துடன் ஒருங்கிணைக்க முயல்வோம். சொந்தக் குடும்பங்களுடன் கொண்டாட இயலாதோரும் தொலைதூரம் போக வேண்டிய தேவையில்லாமல் வீட்டுக்கு அருகிலேயே பலருடன் இணைந்து குடும்ப உணர்வைப் பெறலாம்,” என்றார் திருவாட்டி சாந்தா.
இப்படி 20,000க்கும் அதிகமானோர் ஞாயிற்றுக்கிழமையன்று குடும்பங்களாகவும் நண்பர் கூட்டங்களாகவும் திரண்டு, நள்ளிரவு வாணவேடிக்கைகளுக்காகக் காத்திருந்தனர். கருநிற வானில் பல வண்ணங்களில் வாணங்கள் விரிந்து மின்னியபோது, கூடியிருந்தவர்கள் உற்சாகத்தில் ஆரவாரித்தனர்.
31 ஈசூன் சென்ட்ரல் 1ல் உள்ள ‘ஃபுட்சால் அரினா’க்கு அருகிலுள்ள திறந்தவெளித் திடலில் அமைக்கப்பட்டிருந்த நிகழ்ச்சி மேடை, கூடாரங்கள், தற்காலிக உணவுக்கடைகள், பிள்ளைகளுக்கான பலூன் சறுக்கு விளையாட்டுகள் ஆகியவை வட்டாரவாசிகளை மகிழ்வித்தன. இரவு 8 மணியளவில் மழை பெய்ததால் அந்த இடம் நனைந்தபோதும் மக்களின் உற்சாகத்திற்குக் குறைவில்லை.
நண்பர்களுடன் நிகழ்ச்சியைக் காண வந்திருந்த வடிவமைப்புப் பொறியாளர் ஆல்பர்ட் சூசை, 32, இரண்டு மாதங்களுக்குமுன் இந்தியாவின் காரைக்காலில் பிறந்த தம் முதல் குழந்தையுடன் புத்தாண்டைக் காெண்டாட முடியவில்லை என்ற ஏக்கத்துடன் இருக்கிறார். 2016லிருந்து சிங்கப்பூரில் வசித்துவரும் அவர், அடுத்த சில மாதங்களுக்குள் தம் மகனைக் காண ஆசைப்படுவதாக கூறினார்.
பிள்ளைகளைப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு முதன்முறையாக அழைத்து வந்த பொறியாளர் குமரன் பாலசுப்ரமணியம், 40, அங்கு பிள்ளைகளுக்கான வரைதல், வண்ணம் தீட்டுதல் நடவடிக்கைகள் இடம்பெற்றது தனக்குப் பிடித்திருப்பதாகக் கூறினார்.
புத்தாண்டுப் பிறப்பைக் காதலியுடன் இணைந்து கொண்டாடாமல் இருவரும் தனித்தனியே மக்களுக்குச் சேவை செய்வதாக சொங் பாங் சமூக மன்றத் தொகுதி நிர்வாகி டி. திபாகர், 28, கூறினார்.
“அவர் உடன் இல்லை என்றாலும் சேவை மனப்பான்மையிலும் கொண்டாட்ட உணர்விலும் இணைந்திருப்பதாகவே உணர்ந்தோம்,” என்றார் அந்த இளையர்.