டெங்கித் தொற்று தொடர்ந்து ஆறு வாரங்களாக அதிகரித்து வருகிறது.
ஜனவரி 7 முதல் 13 வரையிலான வாரத்தில் 396 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இது ஓராண்டுக்கும் மேற்பட்ட காலத்தில் பதிவான ஆக அதிகமான வாராந்தரப் பாதிப்பு அளவு ஆகும். ஆறு வாரங்களுக்கு முன்னர், 143 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டனர்.
கடந்த 2022ல் நோய்த்தொற்றின் உச்சத்தில் வாரத்திற்கு 1,552 பேர் பாதிக்கப்பட்டனர். ஒப்பிட இது குறைவு என்றாலும், தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால், டெங்கி குழுமப் பகுதிகளில் வாழ்பவர்கள் ஏடிஸ் கொசு எண்ணிக்கையை ஒடுக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறும் நோய் பரவுவதை தடுக்க உதவுமாறும் தேசிய சுற்றுப்புற வாரியம் மக்களை வலியுறுத்தியுள்ளது.
கொசு முட்டைகளுக்காக குடியிருப்புப் பகுதிகளை ஆய்வு செய்யும் தேசியச் சுற்றுப்புற வாரியத்தின் அதிகாரிகளுடன் ஒத்துழைக்குமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டது.
கடந்த ஆண்டு கிட்டத்தட்ட 10,000 டெங்கி சம்பவங்கள் பதிவாகின. 2022ல் அந்த எண்ணிக்கை 32,000க்கும் அதிகம். ஏடிஸ் கொசு மூலம் பரவும் வைரஸ் தொற்றுநோய் பாதிப்பு எண்ணிக்கை 2020ல் மிக அதிகமாக, 35,315 ஆக இருந்தது. 32 பேர் உயிரிழந்தனர்.
டெங்கி நோயால் 2023ன் முதல் ஒன்பது மாதங்களில் மூவர் உயிரிழந்தனர். அதற்கு முந்தைய ஆண்டில் 19 பேர் மாண்டனர்.
இருப்பினும், அண்மையில் பெய்த கனமழையால் டெங்கி சம்பவங்கள் குறையக்கூடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மழையினால் தேங்கி நிற்கும் நீர் அதிகரித்து கொசு இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் அதேநேரத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை, கொசு முட்டைகளை அடித்துச் சென்று அவற்றில் பெரும்பாலானவற்றைக் அழித்து விடுகிறது.
2023ல் அதிகப் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய டெங்கி வகைகளில் ஏற்பட்ட இரு மாற்றங்களைப் பற்றி வல்லுநர்கள் அதிகம் கவலைப்படவில்லை. எனினும் இரண்டாவது வகைத் தொற்று அதிகக் கடுமையானதாக இருக்கலாம் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
நான்கு டெங்கி வகைகள் உள்ளன. 2021, 2022ஆம் ஆண்டுகளில் ஏற்பட்ட தொற்றுக்கு டென் 3 வகை முக்கிய காரணமாக இருந்தது. 2023 ஜூனில் டென் 1 வகை அதை மிஞ்சியது. பின்னர் செப்டம்பரில் டென் 2 வகை ஆதிக்கம் செலுத்தியது.
ஒரே மாதிரியான நோய்க்கிருமி மூலம் ஒருவர் மீண்டும் பாதிக்கப்படுவதில்லை, ஆனால் மற்ற மூன்று வகைகளினால் பாதிக்கப்படலாம்.
திடீர் காய்ச்சல், தலைவலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல், வாந்தி போன்றவை டெங்கியின் அறிகுறிகளாகும். அத்தகைய அறிகுறிகள் தென்பட்டால், கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க உடனடியாக மருத்துவரைக் காணவேண்டும்.
தற்போது 80 டெங்கி பாதிப்பு குழுமங்கள் உள்ளன. அவற்றில் 17 குழுமங்களில் 10 அல்லது அதற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பூன் லே- கார்ப்பரேஷன் ரோடு- ஜூரோங் வெஸ்ட் பகுதியில் உள்ள ஆகப் பெரிய குழுமத்தில் 200 சம்பவங்கள் பதிவாகியுள்ளது. அவற்றில் 48 கடந்த பதினைந்து நாட்களுக்குள் ஏற்பட்ட பாதிப்பாகும்.
இந்தத் குழுமத்திலும் மற்றும் பாசிர் ரிசில் உள்ள இரு குழுமங்கள், அப்பர் தாம்சனில் உள்ள ஜாலான் செகார் ஆகியவற்றிலும் டெங்கி வேகமாகப் பரவுவதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு (என்ஈஏ) கூறியது.
ஏடிஸ் கொசு கடிப்பதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள பூச்சி விரட்டியைப் பயன்படுத்துமாறு அது மக்களை வலியுறுத்தியது.
டெங்கி இருப்பதாக கண்டறியப்பட்ட அல்லது சந்தேகிக்கப்படும் எவரும் மேலும் கொசுக்கடியைத் தவிர்க்கவும், டெங்கி நோய்க்கிருமி கொசுக்களையும் அக்கம்பக்கத்தில் குடியிருப்போரிடமும் பரவுவதைத் தடுக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.