சிங்கப்பூரிலுள்ள இந்திய முஸ்லிம் சமூகத்தினிடையே பிரபலமடைந்த பென்கூலன் பள்ளிவாசலின் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது அந்தப் பள்ளிவாசல்.
51 பென்கூலன் ஸ்திரீட்டில் நகர மத்தியில் அமைந்துள்ள அந்தப் பள்ளிவாசல் விரிவாக்கம் கண்டுள்ள நிலையில் புதுப்பொலிவுடன் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 1) மதிய தொழுகைக்காக மக்களை வரவேற்றது.
முன்னதாக 600 பேர் வரையில் மட்டும் தொழக்கூடியதாக இருந்த பகுதி, புதுப்பிப்புக்குப் பிறகு 1,100 பேர் தொழ விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
நான்கு மாடிகளைக் கொண்ட இந்தப் பள்ளிவாசலில், புதுப்பிப்புக்குப் பிறகு எல்லா மாடிகளுக்கும் மின்தூக்கி வசதி அமைக்கப்பட்டுள்ளது. நடமாடச் சிரமப்படுவோருக்காகவும் சக்கர நாற்காலி பயன்படுத்துவோருக்காகவும் கைப்பிடி, சரிவுப்பாதை, மின்தூக்கி போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர், சுகாதார இரண்டாம் அமைச்சர் மற்றும் முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் மசகோஸ் ஸுல்கிஃப்லி நண்பகல் நேரத்தில் பள்ளிவாசலைத் திறந்துவைத்தார்.
“நிதி தர முன்வந்த கொடையாளர்களின் ஆதரவும் ஈகைத்தன்மையும் இன்றி இந்த மேம்பாட்டுத் திட்டம் சாத்தியமாகி இருக்காது. நம் சமய நிலையங்களை ஆதரிக்கச் சமூகமே ஒன்றுசேரும் துடிப்புமிக்க நிலைமையை இது காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.
பெண்களுக்கான தொழுகை இடத்தில் தனி வாசல், புதிதாகச் செய்யப்பட்டுள்ள மேம்பாடுகளில் அங்கம் வகிக்கிறது. மதராசா எனும் இஸ்லாமியப் பள்ளி வசதிகளும் மேம்பாடு கண்டுள்ளன. இளையருக்கென அமைக்கப்பட்டுள்ள சிறப்பு இடம் ஒன்றில் அமர்ந்து படிப்பதற்கும் மடிக்கணினிகளில் கலந்துரையாடவும் வசதிகள் உள்ளன. தமிழ், மலாய், ஆங்கிலத்திலுள்ள பல்வேறு புத்தகங்களுடன் ஃபுஸ்பால் விளையாட்டும் அங்கு உள்ளது.
புதுப்பிப்புப் பணிகளுக்கான செலவு சுமார் 4 மில்லியன் வெள்ளி. அதில் ஒரு மில்லியன் வெள்ளியை முயிஸ் எனப்படும் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் வழங்கியது. எஞ்சிய மூன்று மில்லியன் வெள்ளி பொதுமக்கள் நன்கொடை மூலம் திரட்டப்பட்டது.
2019ஆம் ஆண்டு தொடங்கிய புதுப்பிப்புப் பணிகள், கொவிட்-19க்குப் பிறகு தாமதம் அடைந்ததாகக் கூறினார் பள்ளிவாசல் தலைவர் ஹாஜி.மு.யூ. முஹம்மது ரஃபீக்.
புதுப்பிப்புக்காக பள்ளிவாசல் மூடப்பட்ட நேரத்தில் பென்கூலன் பள்ளிவாசலைச் சேர்ந்த மூன்று போதகர்கள் அப்துல் கஃபூர் பள்ளிவாசல் தங்கும் வசதியை அளித்ததற்காக நன்றி நல்கினார். “இந்நாள் என் வாழ்வில் மிக மகிழ்ச்சியான நாள். இந்நாளுக்காக நானும் பள்ளியைச் சேர்ந்த அனைவரும் பலநாள் காத்திருந்தோம்,” என்று அவர் உருக்கத்துடன் கூறினார்.