வெப்பநிலை மேலும் 1 டிகிரி செல்சியஸ் அதிகரித்தால், வெப்பமண்டலப் பகுதியில் வேலை செய்யும் 800 மில்லியன் கணக்கான வெளிப்புற ஊழியர்களின் சுகாதாரத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்கா வழிநடத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது.
தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்துக்குப் பிறகு பூமி ஏற்கெனவே ஏறக்குறைய 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பமாகிவிட்டது.
தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்திலிருந்து உலக வெப்பமயமாதலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற நிலையில் வைத்திருப்பதில் உலக நாடுகள் எடுக்கும் நடவடிக்கைகள் போதாது என்று 2023 ஐக்கிய நாட்டு பருவநிலை மாற்ற மாநாட்டில் எச்சரிக்கப்பட்டது.
“ஒரு பில்லியனுக்கும் அதிகமான வெளிப்புற ஊழியர்கள் வெப்பமண்டலப் பகுதிகளில் வசிக்கின்றனர். அங்கு ஆண்டின் கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு காலம் நிலவும் வெப்பமும் ஈரப்பதமும், கடுமையாக உழைக்கும் ஊழியர்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பு வரம்புகளை விட அதிகமாக இருக்கும்,” என்று மார்ச் தொடக்கத்தில் ‘ஒன் அர்த்’ எனும் சஞ்சிகையில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
வெப்பமண்டலப் பகுதிகளில் வேலை செய்யும் வெளிப்புற ஊழியர்களின் வெப்ப மீள்திறனை மேம்படுத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த தனிநபர்கள், சமூகங்கள், அரசாங்கங்களுக்கு ஆய்வாசிரியர்கள் அறைகூவல் விடுத்தனர்.
வெளிப்புற ஊழியர்கள் தொடர்பான ஆய்வுகளில் நிலவும் குறைபாடுகளையும் ஆய்வாசிரியர்கள் சுட்டிக்காட்டினர். ஒவ்வொரு வெளிப்புற வேலைத் துறைக்கும் மக்கள்தொகைக்கும் வெப்பத் தாக்கங்களை சிறப்பாக அளவிட கூடுதல் களப்பணிக்கான தேவையும் அதில் அடங்கும்.
வயது, உடல்நலம், வேலை சூழல் போன்ற அம்சங்கள் ஒவ்வொருவரின் வெப்ப அழுத்தத்தின் அபாயத்தை நிர்ணயிக்கின்றன.
தற்போதுள்ள ஆய்வுகள் தீர்வுகளில் கவனம் செலுத்துவது அரிதே என ஆய்வாசிரியர்கள் கூறினர். அதாவது, வெப்பமான சூழலுக்கு ஊழியர்கள் தங்களை மாற்றி அமைத்துக்கொள்வது குறித்து குறைவாகவே ஆய்வு செய்யப்படுகிறது.
நிலையான ஊதியம் பெறாத, ஆனால் உற்பத்தித்திறன் அடிப்படையில் ஊதியம் பெறும் ஊழியர்கள், வெப்பச் சோர்வு அறிகுறிகளைப் புறக்கணித்து மேலும் வருமானம் ஈட்ட முனைகின்றனர்