கிளார்க் கீ பகுதியில் உள்ள ரிவர்சைட் லைஃப்ஸ்டைல் ஹப் சிகியூ@ கிளார்க் கீக்கு அடுத்த முறை நீங்கள் செல்லும்போது, நீங்கள் நடந்துசெல்ல முன்பைவிட இன்னும் அதிகமான இடம் இருப்பதை உணர்வீர்கள். அந்தப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புப் பணிகள்தான் அதற்குக் காரணம்.
இந்தப் பகுதியில் பழைமைப் பாதுகாப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படும் என்று 1989ஆம் ஆண்டில் அரசிதழில் தெரிவிக்கப்பட்டது. அந்த ஆற்றோரப் பகுதியில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, சிங்கப்பூர் ஆறு போன்ற பழமையையும் புதுமையையும் இணைக்கும் அம்சங்களை மேம்படுத்துவது மறுசீரமைப்புப் பணிகளின் நோக்கமாக இருந்தது.
இந்தத் துடிப்பான இடத்தில் 54 வாழ்க்கைபாணி, கேளிக்கை, உணவு, பானத் தெரிவுகள் உள்ளன. இவற்றில் பாதி புதுமையும் புத்துணர்ச்சியும் பெற்ற அம்சங்கள். அவை ஐந்து கட்டடங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன. 1860களில் கட்டப்பட்ட கடை வீடுகள், சரக்குக் கிடங்குகள் ஆகியவையும் அவற்றில் அடங்கும்.
“இந்த ஆக அண்மைய மறுசீரமைப்புப் பணிகள், நகர மறுசீரமைப்பு ஆணையத்தின் இலக்குடனும் கிளார்க் கீயின் வளமான மரபுடைமையைக் கட்டிக்காக்கும் கேப்பிட்டலேண்ட் நிறுவனத்தின் கடப்பாட்டுடனும் ஒத்துள்ளன,” என்றார் கிளார்க் கீயின் பொது மேலாளர் திரு ரிச்சர்ட் புவா.
21,000 சதுர மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள கிளார்க் கீ வர்த்தகப் பகுதி, கேப்பிட்டலேண்ட் இன்டிகிரேடட் கொமர்ஷியல் டிரஸ்ட் நிறுவனத்துக்குச் சொந்தமானது. அதை கேப்பிட்டலேண்ட் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனம் நிர்வகிக்கிறது.
சொத்து மேம்பாட்டுக்காக செலவிடப்பட்ட $62 மில்லியன், இரவுநேர கேளிக்கை இடமாக இருந்த கிளார்க் கீயை முழுநாள் வாழ்க்கைபாணி, கேளிக்கைத் தளமாக மாற்றி அமைத்தது என்றும் திரு புவா கூறினார்.
அங்குள்ள பாதசாரி நடக்கும் பாதைகள் விரிவாக்கப்பட்டு, சமப்படுத்தப்பட்டிருப்பதால், சிங்கப்பூர் ஆறு, ஃபோர்ட் கேனிங் ஹில் போன்ற அடையாள இடங்களுக்கு இப்போது எளிதில் செல்ல முடியும்.
பாதசாரிகள் செல்லும் இடங்களில் அந்தப் பகுதியின் வரலாற்றுக் குறிப்புகள் பொறிக்கப்பட்ட வெண்கல மரபுடைமைத் தகவல் தகடுகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.
கிளார்க் கீக்கு அருகில் உள்ள மற்ற இடங்களிலும் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
புவியியல் ரீதியாக பார்த்தால், கிளார்க் கீ பகுதியைச் சுற்றி ரிவர் வேலி ரோடு, நார்த் போட் கீ, கிளார்க் கீ, டான் டாய் பிளேஸ் ஆகியவையும் 1886-1887 இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ரீட் பாலம், 1886ல் கட்டப்பட்ட ஒர்ட் பாலம் ஆகியவை உள்ளன.
இவ்விரு பாலங்கள் சிங்கப்பூர் ஆற்றில் இரு கரைகளை இணைப்பதாக உள்ளன. கிளார்க் கீயின் கலாசார குறிப்பாக, ரீட் பாலத்தின் படிக்கட்டுகள் இப்போது இருவர் அமரக்கூடிய இருக்கைகளாக மாற்றப்பட்டுள்ளன. பலகைகளால் ஆன அந்த இருக்கைகள் முன்பு சிங்கப்பூர் ஆற்றில் உணவகங்களாக பயன்படுத்தப்பட்ட பழைய சரக்குப் படகுகளை உடைத்து எடுக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
கிளார்க் கீயில் உள்ள பழ்மபெரும் கட்டடங்களின் சுவர்களில் வண்ணமயமான ஓவியங்கள் பார்ப்போரைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளன.