டிபிஎஸ் வங்கியின் பணமாற்றுச் சேவைகள் மேம்படுத்தப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் பலனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு அந்த வங்கியின் செயல்பாடுகளில் பல இடையூறுகள் ஏற்பட்டன. அதனைத் தொடர்ந்து அதன் முறைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக டிபிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி வியாழக்கிழமையன்று (மார்ச் 28) கூறினார்.
“சேவைகள் கூடுதல் சிறப்பாகவும் விரைவில் கிடைக்கக்கூடியவையாகவும் இருக்கும் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. ஏதேனும் இடையூறு ஏற்பட்டால் உங்களால் மாற்று சேவைகளைப் பயன்படுத்த முடியும். பணமாற்றுப் பரிவர்த்தனை சீராக இருக்கும் என்று பணத்தை அனுப்புபவர், பெறுபவர் இருதரப்பினரிடையே கூடுதல் நம்பிக்கையும் இருக்கும்,” என்றார் டிபிஎஸ் குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பியுஷ் குப்தா. ஆண்டுதோறும் நடைபெறும் அக்குழுமத்தின் நிர்வாகக் குழுச் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
பேநவ் பரிவர்த்தனைகளும் பணமாற்றுப் பரிவர்த்தனைகளும் சரிவர மேற்கொள்ளப்பட்டதை வாடிக்கையாளர்களிடம் தெரியப்படுத்த டிபிஎஸ் எடுத்த முயற்சிகள் கைகொடுத்திருப்பதாக திரு குப்தா சொன்னார். வங்கி முறையில் கோளாறு ஏற்பட்டால் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தக்கூடிய மாற்று வழிகள் ஏப்ரல் மாத இறுதிக்குள் நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தொழில்நுட்பக் கோளாறுகளால் பணமாற்றுப் பரிவர்த்தனைகளில் தாமதம் ஏற்படுவதால் வாடிக்கையாளர்களுக்கு அதிக குழப்பம் ஏற்படலாம் என்பதை திரு குப்தா ஒப்புக்கொண்டார். மீண்டும் பரிவர்த்தனையை மேற்கொள்ளவேண்டுமா என்பது போன்ற முடிவெடுக்க முடியாத நிலையை வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கக்கூடும் என்பதை அவர் சுட்டினார்.
“அத்தகைய குழப்பம் அறவே எழாமல் இருக்கச் செய்யும் நோக்கில் பணமாற்றுப் பரிவர்த்தனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தும் முயற்சிகளை நாங்கள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறோம்,” என்று திரு குப்தா விளக்கினார்.
தொழில்நுட்ப இடையூறுகளைச் சமாளிப்பதில் கவனம் செலுத்த சிறப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் மூத்த அதிகாரிகள் சிலர், தொழில்நுட்ப விவகாரங்களுக்கான புதிய தலைவர் ஆகியோர் வேலைக்கு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.