பாலஸ்தீனத்தின் புதிய பிரதமராகவும் வெளியறவு அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ள டாக்டர் முகம்மது முஸ்தஃபாவுக்குப் பிரதமர் லீ சியன் லூங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டாக்டர் முஸ்தஃபா, பாலஸ்தீன அதிபர் மஹ்முத் அப்பாசுக்கு மிகவும் நெருக்கமானவர்.
பாலஸ்தீனத்தின் முன்னணி வர்த்தகர்களில் ஒருவரான டாக்டர் முஸ்தஃபா மார்ச் 14ஆம் தேதியன்று பிரதமராக நியமிக்கப்பட்டார்.
மிகவும் சவால்மிக்க காலகட்டத்தில் டாக்டர் முஸ்தஃபா பாலஸ்தீனத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டிருப்பதை ஏப்ரல் 5ஆம் தேதியன்று அவருக்கு அனுப்பிய கடிதத்தில் பிரதமர் லீ சுட்டினார்.
காஸாவில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நெருக்கடிநிலை குறித்து சிங்கப்பூர் மிகவும் கவலைப்படுவதாக திரு லீ குறிப்பிட்டார்.
“காஸா மக்களுக்குத் தேவையான உதவி எவ்வித தடையுமின்றி உடனடியாகச் சென்றடை வேண்டும். அதற்குத் தேவையான உடனடி சண்டை நிறுத்தத்துக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பை சிங்கப்பூர் ஆதரிக்கிறது.,” என்று டாக்டர் முஸ்தஃபாவுக்கு அனுப்பிய கடிதத்தில் பிரதமர் லீ தெரிவித்தார்.
பாலஸ்தீன மக்களுக்கு உதவும் வகையில் மருத்துவ, அத்தியாவசியப் பொருள்களை சிங்கப்பூர் அனுப்பிவைத்திருப்பதாக திரு லீ தெரிவித்தார். அதுமட்டுமல்லாது, அத்தியாவசியப் பொருள்களை காஸா மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்க சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையின் விமானம் ஒன்று அங்கிருப்பதாகவும் அவர் கூறினார்.