சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து டிரைஷா எனப்படும் முச்சக்கர வண்டி சுற்றுலா இடம்பெறவில்லை.
கடைசியாக முச்சக்கர வண்டி சுற்றுலா சேவைகளை வழங்கிய நிறுவனத்துக்கான ஒப்பந்தம் நிறைவடைந்தது. அந்த ஒப்பந்தம் மீண்டும் புதுப்பிக்கப்படவில்லை.
‘டிரைஷா அங்கிள்’ எனும் அந்நிறுவனம், 2010ஆம் ஆண்டு முதல் குவீன் ஸ்திரீட்டில் உள்ள ஆல்பர்ட் மால் டிரைஷா பார்க் பகுதியில் முச்சக்கர வண்டி சுற்றுலா சேவைகளை வழங்கி வந்தது.
சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்துகொண்டதன் மூலம் முச்சக்கர வண்டி சுற்றுலா சேவைகளை வழங்குவதற்கான உரிமத்தைப் பெற்றதாக ‘டிரைஷா அங்கிள்’ நிறுவனத்தின் அதிகாரி டியு சின் ஹுவே, சிஎன்ஏ ஊடகத்திடம் தெரிவித்தார். ஒப்பந்தம் நிறைவடைவதற்கு முன்பு சென்ற ஆண்டு மே மாதம் மற்ற சேவைககளின் பயன்பாட்டிற்காக குவீன் ஸ்தீரிட்டில் சம்பந்தப்பட்ட பகுதியில் இயங்குமாறு தங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதென்று திருவாட்டி டியூ செவ்வாய்க்கிழமையன்று (ஏப்ரல் 9) கூறினார்.
ஒப்பந்தம் நிறைவடையவிருந்த வேளையில் ‘டிரைஷா அங்கிள்’ மட்டும்தான் முச்சக்கர வண்டி சுற்றுலா சேவைகளை வழங்கிவந்த நிறுவனமாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.
குவீன் ஸ்திரீட்டில் முச்சக்கர வண்டி சுற்றுலா இடம்பெற்ற பகுதியைப் பயன்படுத்துவது குறித்து மறுபரிசீலனை செய்ய அது மீண்டும் சம்பந்தப்பட்ட அமைப்புகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் சுற்றுப்பயண முகவர், சுற்றுப்பயண வழிகாட்டிகள் பிரிவின் இயக்குநர் ஏனி சாங் சொன்னார்.
தற்போது சிங்கப்பூரில் வேறு எந்த நிறுவனமும் முச்சக்கர வண்டி சுற்றுலா சேவைகளை வழங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.