சிங்கப்பூரில் 2023ஆம் ஆண்டில் முன்னெப்போதும் இல்லாத அளவில் விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 620 விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சைகள் பதிவாகின.
கண்பார்வை இழந்தவர்களுக்குத் அதைத் திரும்ப கொண்டு வரவும் கண்பார்வையை மேம்படுத்தவும் சிறார் முதல் 90 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் வரை விழி வெண்படல அறுவை சிகிச்சை செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் வெறும் 129 விழி வெண்படலங்கள் தானம் செய்யப்பட்டன.
ஏறத்தாழ 500 விழி வெண்படலங்கள் அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்டன.
2018ஆம் ஆண்டுக்கும் 2022ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் 441லிருந்து 571 வரையிலான விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன.
2020ஆம் ஆண்டில் மட்டும் கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக வெறும் 261 விழி வெண்படல அறுவை சிகிச்சைகள் நடத்தப்பட்டன.
2023ஆம் ஆண்டில் விழி வெண்படல அறுவை சிகிச்சை செய்துகொண்ட 620 பேரில் 80 விழுக்காட்டினர் சிங்கப்பூரர்கள், சிங்கப்பூர் நிரந்தரவாசிகள்.
சிங்கப்பூரில் நடத்தப்படும் விழி வெண்படல அறுவை சிகிச்சைகளில் 60 விழுக்காடு, சிங்கப்பூர் தேசிய கண் மையத்தில் நடத்தப்படுகின்றன. மற்றவை பிற மருத்துவமனைகளில் நடத்தப்படுகின்றன.
2023ஆம் ஆண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு விழி வெண்படல அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளபோதிலும் அவ்வாண்டு இறுதி நிலவரப்படி இன்னும் 99 பேர் விழி வெண்படலத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.