சிங்கப்பூரில் அடுத்த மாதம் 13ஆம் தேதி முதல் சில சேவைகளை இணையம் வழி முன்பதிவு செய்த பிறகே போக்குவரத்து காவல்துறை அலுவலகத்தை அணுகமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 23) அன்று காவல்துறை அறிக்கை வெளியிட்டது.
ஓட்டுநர் உரிமத்தில் உள்ள தகவல்களை மாற்றுவது, வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை உள்ளூர் ஓட்டுநர் உரிமமாக மாற்றுவது போன்ற சேவைகளுக்கு இனி இணையம் வழி முன்பதிவு செய்த பிறகே போக்குவரத்து காவல்துறையை அணுகமுடியும்.
தற்போது இந்த சேவைகளை முன்பதிவுகள் ஏதும் செய்யாமல் நேரடியாக அலுவலகத்திற்கு சென்று பெறலாம்.
முன்பதிவுகளுக்கு சிங்கப்பூர் காவல்துறையின் இணையப்பக்கத்தை நாடலாம்.
வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை உள்ளூர் ஓட்டுநர் உரிமமாக மாற்ற விரும்புபவர்கள் ‘பார்ம்எஸ்ஜி’ (FormSG) வாயிலாகவும் சேவைகளை நாடலாம்.
ஓட்டுநர் உரிமத்தில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது குடியுரிமையில் மாற்றம் செய்வது போன்ற சேவைகளையும் இணையத்தின் வழி நாடலாம்.
மேலும் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வது, பெற்றுக்கொள்வது போன்ற வசதிகளும் இணையத்தில் உள்ளன.
புதிய விதிமுறை மே மாதம் 13ஆம் தேதி நடப்புக்கு வருகிறது. அதனால் ஏப்ரல் 29ஆம் தேதி முதல் மே 12ஆம் தேதி வரை முன்பதிவுகள் ஏதும் செய்யாமல் நேரடியாக போக்குவரத்து காவல்துறை அலுவலகத்திற்கு சென்று சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.
பொதுமக்களுக்கு போக்குவரத்து தொடர்பான சேவைகளை எளிதாக பெற இம்மாற்றங்களை செய்வதாக காவல்துறை தெரிவித்தது.