சிங்கப்பூரின் இயற்கையைப் பாதுகாப்பது தொடர்பில் உள்ளூர் விஞ்ஞானிகளும் இயற்கைப் பாதுகாப்பு ஆர்வலர்களும் முன்வைத்துள்ள பரிந்துரைகளை அரசாங்கம் கவனமாக ஆய்வுசெய்யும் என்று தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ கூறியுள்ளார்.
கிட்டத்தட்ட 40 பேர் இந்தப் பரிந்துரைகளை முன்வைத்துள்ளனர்.
மண்டாய், தாகூர் வனப்பகுதிகளை இயற்கைப் பூங்காக்களாகப் பாதுகாத்தல், நாடு முழுவதும் நில அடிப்படையிலான வாழ்விடங்கள் எவ்வாறு ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டுள்ளன என்ற சுற்றுச்சூழல் சார்ந்த வரைபட நடவடிக்கையை மேற்கொள்ளல், சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த மதிப்பீடுகள் சட்டரீதியாகக் கட்டாயம் என்பதை உறுதிசெய்தல் போன்றவை இந்தப் பரிந்துரைகளில் அடங்கும்.
திரு லீ, ஏப்ரல் 28ஆம் தேதி, சிங்கப்பூர் மத்தியப் பொது நூலகத்தில் நடைபெற்ற, நிலம்சார் பாதுகாப்புத் திட்டம் எனும் நூலின் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார்.
சிங்கப்பூரின் பல்லுயிர்ச் சூழல், இயற்கை ஆர்வலர் சமூகத்தின் விருப்பங்கள் ஆகியவற்றின் தொகுப்பு அது. 171 பக்கங்களைக் கொண்ட அந்நூல், சிங்கப்பூர் ஊர்வன அறிவியல் சங்கத்தின் இணை நிறுவனர் சங்கர் அனந்தநாராயணன், விலங்கியல் வல்லுநர் ஆண்டி ஆங் ஆகியோரின் தலைமையில் தொகுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கல்விமான்கள் உட்பட, இயற்கை ஆர்வர்லர்கள் பலரிடம் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில் அது தொகுக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் அரியவகை அல்லது அழிந்துபோன சில உயிரினங்களை மீட்டெடுப்பதே சிங்கப்பூரின் தற்போதைய முக்கிய முன்னுரிமைகளில் ஒன்று என்று திரு சங்கர் கூறினார்.
பல்லுயிர்ச் சூழல் குறித்த முழுமையான, ஆழமான புரிதலுடன் அவற்றை மிகச் சிறப்பான முறையில் பாதுகாப்பது தொடர்பான புரிதலும் முக்கியம் என்று திரு சங்கரும் டாக்டர் ஆண்டியும் குறிப்பிட்டனர்.
வெளியீட்டு நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் லீ, “சிங்கப்பூரில் இயற்கைப் பாதுகாப்புக்கு சமூகத்தின் முனைப்பும் ஆதரவுமே முக்கிய அடிப்படையாக விளங்குகிறது,” என்று கூறினார்.
அரசாங்கத்திற்கும் இயற்கை ஆர்வலர்களுக்கும் இடையிலான கடந்தகால ஒத்துழைப்பை அவர் எடுத்துரைத்தார்.
சுங்கை புலோ பகுதியை 2002ஆம் ஆண்டு இயற்கை வளப் பகுதியாக அரசிதழில் அறிவித்ததை அவர் சுட்டினார். புலம்பெயர் கரையோரப் பறவைகளுக்கான அந்த வாழ்விடத்தை சிங்கப்பூர் இயற்கை சங்கம் கண்டுபிடித்தது.