தொழிலாளர் இயக்கத் தலைவர் இங் சீ மெங் அடுத்த பொதுத் தேர்தலில் போட்டியிடக்கூடும்.
ஆனால், அது ஜூரோங் அல்லது அங் மோ கியோ குழுத் தொகுதிகளில் ஒன்றாக இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
அத்துடன், அவர் 2020ஆம் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட செங்காங் குழுத் தொகுதியில் திரும்பவும் போட்டியிட மாட்டார் என்று கூறப்படுகிறது; அந்தத் தேர்தலில் திரு இங் தலைமை தாங்கிய குழு 47.88 விழுக்காடு வாக்குகள் பெற்று பாட்டாளிக் கட்சியிடம் தோல்வியைத் தழுவியது.
ஏப்ரல் 21ஆம் தேதி புக்கிட் பாத்தோக் தொகுதியில் ஃபேர்பிரைஸ் குழுமம் ஏற்பாடு செய்திருந்த நோன்புப் பெருநாள் நிகழ்ச்சியில் திரு இங் கலந்துகொண்டார். அதைத் தொடர்ந்து அவர் அடுத்த பொதுத் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவார் என்ற ஊகம் அதிகரித்துள்ளது. அந்த நிகழ்ச்சியில் மக்கள் செயல் கட்சியின் தற்போதைய புக்கிட் பாத்தோக் நாடாளுமன்ற உறுப்பினர் திரு முரளி பிள்ளையும் பங்கேற்றார் என்பது நினைவுகூரத்தக்கது.
என்டியுசி தலைமைச் செயலாளராக வழக்கமாக ஓர் அமைச்சரே பொறுப்பு வகித்துள்ளார். இந்த நடைமுறை 1980ஆம் ஆண்டிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த ஆண்டில்தான் என்டியுசி தலைமைச் செயலாளராக இருந்த திரு லிம் சீ ஓன் முதன் முதலாக பிரதமர் அலுவலக அமைச்சராக பதவி வகித்தார்.
திரு இங் சீ மெங் கடந்த 2018ஆம் ஆண்டிலிருந்து தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். நாடாளுமன்ற உறுப்பினரல்லாத ஒருவர் என்டியுசி தலைமைச் செயலாளராக இருப்பது இதுவே முதல் முறை என்பது கவனிக்கத்தக்கது.
“அவர் தற்பொழுது மக்கள் செயல் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாதபோதும் தொடர்ந்து நாலாண்டுகளாக தொழிற்சங்க காங்கிரசின் தலைமைச் செயலாளராக இருந்து வந்துள்ளார். இது அவர் தேர்தலில் வெல்லும்பட்சத்தில் ஆளும் கட்சி அவருக்கென சில திட்டங்களை வைத்திருக்கிறது என்று தெரிகிறது.
“அவரை தேர்தலில் எங்கு நிறுத்துவது என்ற கேள்விக்கு கட்சியில் பல தெரிவுகள் இருக்கும். ஆனால், அவர் தனித் தொகுதியில் நிறுத்தப்பட மாட்டார். அதற்கும் அப்பால், அவர் மீண்டும் செங்காங் குழுத் தொகுதியில் நிறுத்தப்படும் சாத்தியமில்லை,” என்று கூறுகிறார் சிங்கப்பூர் நிர்வாகப் பல்கலைக்கழகத்தில் சட்ட இணைப் பேராசிரியராக உள்ள திரு யூஜின் டான்.
மாறாக, மக்கள் செயல் கட்சி வலுவாக உள்ள தொகுதியிலேயே திரு இங் நிறுத்தப்படுவார் என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.