வேகமாக மாறிவரும் உலகப் பொருளியல், அரசியல் சூழலில், சம்பளம், வேலைச்சூழல், ஓய்வூதியம் ஆகியவை தொடர்பில் உலகின் பல நாடுகளிலும் தொழிற்சங்கங்களுக்கும் நிறுவனங்களுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது.
ஆனால், சிங்கப்பூரின் அணுகுமுறை வேறாக இருக்கிறது. சவால்களை எதிர்கொள்ள அரசாங்கத்துடனும் முதலாளிகளுடனும் கைகோத்துச் செயல்பட்டு வருகிறது சிங்கப்பூரின் தொழிலாளர் இயக்கம்.
1961ஆம் ஆண்டு தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) உருவாக்கப்பட்டபோது சிங்கப்பூரில் வேலைநிறுத்தங்களும் தொழிலாளர் போராட்டங்களும் அதிகமாக இருந்தன. ஆயினும், 1969ல் இடம்பெற்ற நவீனமயமாதல் மாநாட்டிற்குப் பின் நிலைமை மாறி, அரசாங்கத்துடன் ஒத்துழைக்கும் போக்கை என்டியுசி கைக்கொண்டது.
தொழிற்சங்கத் தலைவர்கள் என்பவர்கள் யார், அவர்களது பணி எத்தகையது என்பதைச் சிந்திக்க வைத்த தருணமாக அது அமைந்தது.
மோதல்களையும் கலகங்களையும் ஊக்குவித்துக் குளிர்காயும் போலியான தலைமைத்துவத்தை விடுத்து, நேர்மையுடன் தங்களது பணியைச் செய்த தலைவர்களால் ஊழியரணி மேம்பட்டு, இந்நாட்டின் வளர்ச்சியை ஆதரித்து வந்தது.
படிப்படியான ஊதிய உயர்வுத் திட்டம் மூலமாக குறைந்த வருமான ஊழியர்களுக்கு உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவுகளைச் சமாளிக்க என்டியுசி உதவுகிறது.
தற்காலிகப் பணியாளர்களுக்கு அதிகப் பாதுகாப்பையும் மூத்த ஊழியர்களின் ஓய்வூதிய வயதையும் மறுவேலையில் அமரும் வயதையும் உயர்த்தவும் என்டியுசி செயல்பட்டது.
இவையெல்லாம் போக, சக ஊழியர்களின் நலன்களைப் பேணுவதற்காக சம்பள உயர்வு, நிம்மதியான வேலைச்சூழல் போன்றவற்றுக்காகப் பாடுபடும் பலர் நம்மிடையே உள்ளனர். அவர்களில் நால்வரைத் தமிழ் முரசு நேர்காணல் செய்தது.
அந்நால்வரும் என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங்கிடமிருந்து நாளை மே தின விருது பெறவுள்ளனர். சன்டெக் சிங்கப்பூர் மாநாட்டு, கண்காட்சி மையத்தில் இடம்பெறும் விழாவில் 128 தனிமனிதர்களுக்கும் 44 அமைப்புகளுக்கும் விருது வழங்கப்படவுள்ளது.
அண்ணன் காட்டிய வழியில் வெற்றிநடைபோடும் தம்பி
தமது முப்பத்து இரண்டாவது வயதில் தொழிற்சங்கத்தில் சேர்ந்தபோது தொழிற்சங்கவாதிகள் முரட்டுத்தனமாகப் போராடுபவர்கள் என்று திரு பிரகாசம் முனிசாமி எண்ணியிருந்தார்.
ஆயினும், கடல் மற்றும் கப்பல் கட்டுதல் துறைகளுக்கான தொழிற்சங்கத்தில் இருபத்தேழு ஆண்டுகளாக ஆற்றிய சேவை திரு பிரகாசத்தைப் பக்குவப்படுத்தியது.
பதினொரு வயதில் தாயாரை இழந்து, ஐந்து ஆண்பிள்ளைகள், ஒரு பெண்பிள்ளை எனப் பெரிய குடும்பத்தில் வளர்ந்த இவரது கரடுமுரடான வாழ்க்கை அனுபவம், சக ஊழியர்களின் பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளத் தேவையான மனப்பக்குவத்தைக் கொடுத்தது.
‘ஓ’ நிலை பயின்றபின் ‘வெல்டிங்’ எனப்படும் பற்றவைப்புத் தொழிலைச் செய்து வந்தார் திரு பிரகாசம்.
அத்தொழிலில் சிறந்து விளங்கிய இவர், மூன்றாண்டுகளுக்குப் பிறகு பதவி உயர்வும் சம்பள உயர்வும் பெற்றார்.
“கடுமையாக உழைக்கும் என் அண்ணன் எனக்கு முன்மாதிரி. அவரைப் பின்பற்றியே நானும் கடுமையாக உழைக்கிறேன்,” என்றார் இப்போது 59 வயதாகும் திரு பிரகாசம்.
திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டுமென விரும்பிய திரு பிரகாசம் 1996ஆம் ஆண்டில் தொழிற்சங்கத்தில் சேர்ந்தார். சக ஊழியர்கள் தொடக்கப்பள்ளி மட்டும் படித்திருந்த நிலையில் இவருக்கு ‘ஓ’ நிலை படிப்பு இருந்ததால் தொழிற்சங்கத்தில் தலைமைப் பொறுப்பு ஏற்கும்படி சங்கத்தினரால் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
நல்ல தொழிற்சங்கத் தலைவராகத் தம்மை உருவாக்கியது என்டியுசியே என்றார் திரு பிரகாசம்.
“என்டியுசி தொடர்ந்து பயிற்சிகளும் திறன்மேம்பாடு வகுப்புகளையும் வழங்கி வருகிறது. ஆர்வமுள்ளோருக்கு என்டியுசி வழங்கும் வாய்ப்புகள் அவர்களே வியக்கும் வகையில் அவர்களை வெகுவாக உருமாற்றுகின்றன,” என்று இவர் குறிப்பிட்டார்.
2013 முதல் 2017 வரை தொழிற்சங்கத்தின் துணைத் தலைவராகச் செயலாற்றிய திரு பிரகாசம், பலரையும் தொழிற்சங்கத்தில் சேர ஊக்குவித்தார்; பின்னர் 2017ஆம் ஆண்டில் உதவித் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார்.
“கொவிட்-19 காலகட்டத்தில் ஊழியர்கள் சிரமப்பட்டபோது தொழிற்சங்கம் பெரிதும் கைகொடுத்தது,” என்றார் திரு பிரகாசம்.
ஆட்குறைப்பு நடவடிக்கைகளை நிறுவனம் எடுத்தபோது வேலை இழந்தவர்களுக்கான இழப்பீட்டைக் கூடுமானவரை பெற முயன்றதுடன் அவர்களுக்குப் புதிய வேலைகளைத் தேடவும் தொழிற்சங்கம் மூலமாக இவர் கைகொடுத்தார்.
தொழிற்சங்கத்தின் முன்னைய தலைவர் ஸ்டிஃபன் சுங்கைத் தமது முன்மாதிரியாக திரு பிரகாசம் கருதுகிறார்.
“பொதுவாக இந்தியர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமின்றி வேலை இடங்களிலும் எளிதில் உணர்ச்சிவயப்படுவர்கள் என்பது என் கருத்து. நானும் எளிதில் மகிழ்ச்சியையும் கோபத்தையும் வெளிப்படுத்துவேன். என்னைத் தொழில்முறைப்படுத்தி எனக்குச் சரியான விழுமியங்களைக் கற்றுக்கொடுத்தது திரு சுங்தான்,” என்றார் இவர்.
தொழிலாளர்களின் நலன், தொழில்நலனைச் சார்ந்துள்ளதைப் புரிந்துகொண்டதால் திரு பிரகாசம் முத்தரப்புப் பங்காளித்துவக் கூட்டமைப்பில் சுமுகமாகச் செயல்பட முடிந்தது.
வேலையிட நிர்வாகிகள், மனிதவளப் பிரிவினர், அரசாங்க அதிகாரிகள், அரசாங்க ஊழியர்கள் ஆகியோருடனான பேச்சுவார்த்தைகள் இந்தப் பங்காளித்துவத்தை மேம்படுத்தும் என்பது இவரது கருத்து.
‘தொழிலாளர்களின் தோழன்’ என்ற நட்சத்திர விருது வழங்கி சிறப்பிக்கப்பட இருக்கிறார் திரு பிரகாசம்.
தொய்வின்றித் தொண்டாற்ற பேரூக்கம் அளிக்கும் விருது
பத்தாண்டுகளுக்கும் மேல் பாதுகாவல் துறையில் பணியாற்றி உள்ள திருவாட்டி சிவமணி தியாகராஜன், 48, மன உறுதியாலும் தளரா உழைப்பாலும் வாழ்நாள் கற்றல்மீது கொண்டுள்ள நம்பிக்கையினாலும் வேலையில் படிப்படியாக உயர்ந்திருக்கிறார்.
“ஃபோகஸ் செக்யூரிட்டி சர்விசஸ்’ நிறுவனத்தில் தலைமைப் பாதுகாவல் அதிகாரியாகப் பணிபுரியும் திருவாட்டி சிவமணி, தம் தந்தையார் திரு நாகலிங்கம் சிவாவின் ஊக்குவிப்பால் அத்துறையில் சேர்ந்தார்.
பாதுகாவல் அதிகாரிகளுக்கான தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவரான திரு நாகலிங்கம் சிவா, அத்துறையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த தம் மகள் திருவாட்டி சிவமணியை ஊக்குவித்தார்.
“ஊழியர்களின் நலனுக்காகத் தொழிற்சங்கங்கள் பாடுபடுவதைக் காணும்போது அவற்றின் மீதான நன்மதிப்பு உயர்கிறது. எனவே, நான் என் தந்தையாரின் அறிவுரைப்படி நடந்துகொண்டேன்,” என்றார் திருவாட்டி சிவமணி.
முன்பு 12 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்ய வேண்டி இருந்த பாதுகாவலர்கள் இப்போது அவ்வளவு நேரம் பணிபுரிய வேண்டியதில்லை.
அத்துடன், அவர்களுக்குக் கூடுதலான ஓய்வுநேரம், கூடுதலான ஞாயிற்றுக்கிழமை விடுப்புகள், திறன் மேம்பாட்டு வாய்ப்புகள் ஆகியவை கிடைக்கின்றன.
இந்த மாற்றங்களுக்காகத் தாம் தொழிற்சங்கங்களுடன் இணைந்து பாடுபட வேண்டி இருந்ததாகத் திருவாட்டி சிவமணி குறிப்பிட்டார்.
கடந்த 2013ஆம் ஆண்டில் பாதுகாவல் அதிகாரிகளுக்கான தொழிற்சங்கத்தில் சேர்ந்த திருவாட்டி சிவமணி, அத்துறையை பெண்களுக்கு ஏற்ற துறையாக மாற்ற முயற்சி எடுத்திருக்கிறார்.
“பாதுகாவல் துறையில் தொழில் முறைமையிலும் வேலை ஏற்பாடுகள் தொடர்பான நீக்குப்போக்கிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தால் அத்துறையில் முன்பைவிட இப்போது பெண்கள் அதிக அளவில் சேர்கின்றனர்,” என்று அவர் கூறினார்.
ஆண்கள் அதிகமாக உள்ள இத்துறையில் ஆணாதிக்கம் குறித்த கவலை பெண்களுக்கு ஏற்படுவது இயல்பே என்ற திருவாட்டி சிவமணி, பெண்கள் தங்களுக்காகக் குரல்கொடுப்பது முக்கியம் என்றும் வலியுறுத்தினார்.
திறன்மேம்பாட்டு வகுப்புகளுக்கு அடிக்கடி செல்லும் இவர், சக ஊழியர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கிறார்.
பாதுகாவல் துறையின் உருமாற்றங்களை உற்று கவனித்து அதற்கேற்ற திறன் மேம்பாடுகளை சக ஊழியர்களுக்கு திருவாட்டி சிவமணி பரிந்துரைப்பார்.
சென்ற ஆண்டு என்டியுசி பெண்களுக்கான தலைமைத்துவத் திட்டத்தில் கலந்துகொண்டதன்மூலம், பிறர் முன்னிலையில் தம் எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ளும் வாய்ப்பை திருவாட்டி சிவமணி பெற்றார்.
“சோதனைக் காலத்தில்தான் நம் பலவீனங்கள் என்ன என்பதை அறிய நேர்வோம். அதனால் துவண்டுவிடாமல் பலவீனங்களை பலங்களாக மாற்றிக்கொள்ள முயல வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்,” என்றார் இவர்.
தாம் பெறவிருக்கும் சிறந்த ‘முன்மாதிரி ஊழியர்’ விருது பேரூக்கம் அளிப்பதாக உள்ளது என்ற திருவாட்டி சிவமணி, தொய்வின்றித் தமது தொண்டைத் தொடரப்போவதாகக் கூறினார்.
கடந்தகாலப் பின்னடைவால் வருங்கால வெற்றிக்குத் தடையில்லை
சிங்டெல் நிறுவனத்தில் வாடிக்கையாளர் சேவை அதிகாரியாகப் பணியாற்றும் திருவாட்டி பர்வீன் கமாலுதீன், 40, பிறர் பேசுவதைப் பொறுமையாகக் கேட்கும் பண்பையும் பலதரப்பட்ட பிரச்சினைகளைக் கையாளும் திறனையும் சக ஊழியர்களின் நலனுக்காகப் பயன்படுத்தி வருகிறார்.
ஒட்டுமொத்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளின்போதும் ஆண்டுதோறும் இடம்பெறும் சம்பள உயர்வு, போனஸ் கலந்துரையாடல்களின்போதும் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக ஒலிக்கும் குரல் திருவாட்டி பர்வீனின் குரலாக இருக்கும்.
சிங்கப்பூர் தொலைத்தொடர்பு ஊழியர்களின் தொழிற்சங்கத்தில் புதிதாகச் சேர்ந்தபோது ஆர்வத்தினால் மட்டுமே சேர்ந்ததாகக் கூறினார் இவர். காலப்போக்கில் தொழிற்சங்கப் பணி இவருக்குப் பிடித்துப்போனது.
“சம்பள விவகாரங்கள் மட்டுமன்றி, தொழிலாளர்களின் வேலை-வாழ்க்கைச் சமநிலைக்கும் பங்காற்றி வருகிறேன். இது என் மனத்திற்கு நெருக்கமான பணியாகிவிட்டது,” என்கிறார் திருவாட்டி பர்வீன்.
தொழிற்சங்கக் கிளை உறுப்பினர், வாடிக்கையாளர் சேவைக் கிளையின் உதவிச் செயலாளர் உள்ளிட்ட சில பொறுப்புகளை வகித்த இவர், இப்போது உதவிப் பொருளாளராக இருக்கிறார்.
தொழிலாளர் சங்கப் பணிகளைப் பெருமிதத்துடன் செய்யும் திருவாட்டி பர்வீன், முன்னைய தலைவர்களின் அனுபவங்கள், அறிவுரைகளிலிருந்து கற்றுக்கொள்வதாகக் கூறினார்.
“எத்தனை இடர்ப்பாடுகள் வந்தாலும் தொடர்ந்து போராடும் மனப்பான்மை தேவை. கடந்தகாலப் பின்னடைவுகள் வருங்கால வெற்றிகளுக்குக் குறுக்கே நிற்காது என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்,” என்கிறார் இவர்.
விவரங்களைச் சரியாகத் தெரிந்துகொள்வதும் சக ஊழியர்களின் கருத்துகளைக் கேட்பதும் தமது பொறுப்புக்குத் தேவைப்படும் முக்கியத் திறன்களாக திருவாட்டி பர்வீன் கருதுகிறார்.
செயற்கை நுண்ணறிவு, மின்னிலக்கமயம் போன்றவற்றால் தொலைத்தொடர்புத் துறையில் உருமாறிவரும் சூழலில், வாழ்நாள் கற்றல் அவசியமாகிவிட்டதாகவும் இவர் சொல்கிறார்.
இவர் ‘தொழிலாளர்களின் தோழன்’ விருது பெறவுள்ளார்.
முடிவெடுக்க உதவும் மூன்று குடும்பங்கள்
‘ஏ’ நிலை கல்வித் தகுதி கொண்டுள்ள திரு விக்னேஷா ராம் நாயுடு கருணாகரன், 46, சொத்துச் சந்தைத் துறையிலிருந்து வெளியேறி பின்னர் துப்புரவுத் துறையில் பணியாற்றினார். இவர் தேர்வு செய்த பாதை மாறுபட்டதாக இருந்தாலும் அத்துறையில் படிப்படியாக ஏற்றம் கண்டார்.
தற்போது தொழிற்சங்கத் தலைவராக இருந்து பிறருக்குத் தொண்டாற்றும் திரு விக்னேஷா, பாதுகாவல் அதிகாரிகளுக்கான சங்கத்தால் சிறந்த முன்மாதிரி ஊழியராகப் முன்மொழியப்பட்டார்.
சிறுவயதில் படிப்பின்மீது இவர் பெரிதாக ஈடுபாடு காட்டவில்லை. இருப்பினும், வாழ்க்கைத்தொழிலில் முன்னேற விரும்பிய இவர், தமது திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடிவுசெய்தார்.
ஓங் டெங் சியோங் தொழிலாளர் தலைமைத்துவ நிலையத்தில் பல்வேறு வகுப்புகளில் சேர்ந்து வேலை நியமனச் சட்டம் போன்ற வேலைசார்ந்த விதிமுறைகளை கற்றுத் தேர்ந்தார் திரு விக்னேஷா.
பிறர் முன்னிலையில் உரையாற்றுவதிலும் தொழில் வளர்ச்சியிலும் ஆர்வம் காட்டிய திரு விக்னேஷாவைத் தொழிற்சங்கத்தில் சேரும்படி அச்சங்கத்தினர் அழைத்தனர்.
அங்கு தம்மால் தனித்துவமான முறையில் பங்களிக்க முடியும் என்பதை உணர்ந்த திரு விக்னேஷா, உடற்குறை உள்ளோரை வேலையில் அமர்த்துவதற்கும் அவர்களுக்கான வசதிகளைக் கூடுதலாக ஏற்படுத்துவதற்கும் தமது பொறுப்பைப் பயன்படுத்தினார்.
சமரச நடுவராகவும் சேவையாற்றும் திரு விக்னேஷா, தொழிலாளர்கள், நிறுவனங்களுக்கு இடையேயான பூசல்களைத் தீர்க்க உதவுகிறார்.
‘முன்மாதிரி ஊழியர்’ விருதால் தாம் பேருவகை அடைவதாகக் கூறும் இவர், அவ்விருதைத் தனது உழைப்பிற்கும் தான் பட்ட சிரமங்களுக்கும் கிடைத்த வெகுமதியாகக் கருதுகிறார்.
பெற்றோர், மனைவியின் ஆதரவுடன், பணியிடம், தொழிற்சங்கம் என்ற மற்ற இரு குடும்பங்களும் தமது வெற்றிக்கு வித்திட்டதாகத் திரு விக்னேஷா குறிப்பிட்டார்.
“என்னுடைய இந்த மூன்று குடும்பங்களும் நல்ல முடிவுகளை எடுப்பதற்கு எனக்கு வழிகாட்டுகின்றன,” என்கிறார் இவர்.