வேலையில் இருப்பவர்களின் மத்திய சேமநிதிக் (மசேநிதி) கணக்குகளில் ஊழியர்களும் நிறுவனங்களும் சேர்ந்து சந்தா செலுத்தவேண்டும். பகுதிநேர வேலை செய்வோருக்கு அவர்கள் வேலை செய்யும் நாள்களின் அடிப்படையில் முதலாளிகள் சந்தா செலுத்துவர்.
ஆனால் தன்னுரிமைத் தொழிலாளர்களின் மத்திய சேமநிதிக் கணக்கில் வேலைகொடுப்போர் சந்தா செலுத்துவதில்லை. மசேநிதி சாதாரணக் கணக்கிலும் சிறப்புக் கணக்கிலும் சந்தா செலுத்துவது கட்டாயமில்லை என்றாலும் அவர்கள் மெடிசேவ் கணக்குகளுக்கு சுயமாகச் சந்தா செலுத்தவேண்டும்.
தன்னுரிமைத் தொழிலாளராக லாரி ஓட்டும் பணியில் ஈடுபட்டு உள்ள வெங்கடாசலம், 68, தன் வேலையில் நீக்குப்போக்கு அதிகம் என்றாலும் தனது மெடிசேவ் கணக்கில் வேலையிடங்கள் சந்தா செலுத்தினால் நன்றாக இருக்கும் என்றார்.
“முதலாளிகள் பொதுவாகவே முழுநேரப் பணியாளர்களுக்கு முக்கியத்துவம் தருவது இயல்பான ஒன்றுதான். தன்னுரிமைத் தொழிலாளர்களைக் குறைவான செலவிலேயே வேலையில் அமர்த்த முற்படுவர்,” என்று அவர் கூறினார்.
தன்னுரிமைத் தொழிலாளர்களின் சேவையைப் பெறும் நிறுவனங்கள் அவர்களது மத்திய சேமநிதிக் கணக்குகளுக்குச் சந்தா செலுத்தக் கட்டாயப்படுத்துவது ஒரு வகை தீர்வு.
ஆயினும், அதன் சாத்தியக்கூறு இன்னும் கேள்விக்குறியாக உள்ளது.