திருவாட்டி ஹலிமா யாக்கோப் கடந்த ஆறு ஆண்டுகளாக அதிபர் பொறுப்பை வகித்து வருகிறார்.
2020ஆம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து கிட்டத்தட்ட 2022ஆம் ஆண்டு நடுப்பகுதிவரை நீடித்த கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்திலும் அவர் அதிபராக இருந்தார். இதற்கு முன்பு சிங்கப்பூரில் எந்த அதிபரும் இப்படிப்பட்ட சவாலான சூழலைச் சந்தித்ததித்லை.
“பொருளியல், நிதி நெருக்கடிகள் எழுந்தால் எப்படி இருக்கும் என்பது நமக்குத் தெரியும். தேவையான வளங்களை வழங்கும்போது பொருளியல் மீளும். நிலைமை எப்படி உருவெடுக்கும் என்ற புரிதல் இருக்கிறது. ஆனால் கொவிட்-19 நிலவரம் இதற்கு முன்பு நாம் எதிர்கொள்ளாத ஒன்று. இது, சார்ஸ் கிருமிப் பரவல் காலத்துக்கும் மாறுபட்டது. சார்ஸ் பரவல் சிறிது காலத்துக்குத்தான் இடம்பெற்றது. இதுவோ அதிக காலம் நீடித்தது,” என்றார் திருவாட்டி ஹலிமா.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் பாதிக்கப்பட்ட சிங்கப்பூரர்களுக்கு உதவ காப்பு நிதியைப் பயன்படுத்தவேண்டிய நிலைமை உருவானது.
“அந்நடவடிக்கையைத் தொடர்ந்து என்ன நடக்கும், அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், சிங்கப்பூரர்களுக்கு உதவுவது எப்படி போன்ற அம்சங்கள் புரிந்திருக்கவேண்டும். அது மிகவும் முக்கியம்,” என்பதைத் திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார். கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் போன்ற நெருக்கடிகளைக் கையாளத்தான் காப்பு நிதி இருப்பதையும் அவர் சுட்டினார்.
காப்பு நிதியிலிருந்து 69 பில்லியன் வெள்ளித் தொகையைப் பயன்படுத்த அதிபர் ஹலிமா ஒப்புதல் வழங்கினார். 39.7 பில்லியன் வெள்ளி உபயோகிக்கப்பட்டது.
அதன் மூலம் 200,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டன. 20,000 சிறிய, நடுத்தர நிறுவனங்களும் சிறிய நிறுவனங்களும் உதவிக்கரம் நீட்டின. 92 விழுக்காட்டு சிங்கப்பூரர்கள் முதல் கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொண்டனர், 82 விழுக்காட்டினர் இரண்டாவது தடுப்பூசியையும் போட்டுக்கொண்டனர்.
480,000 பேருக்கு மொத்தமாக 593 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டது. 57 மில்லியன் வெள்ளி மதிப்புகொண்ட ஏஆர்டி பரிசோதனைக் கருவிகள் 1.5 மில்லியன் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டது.
“இதன் மூலம் கொவிட்-19 தொடர்பான முக்கிய திட்டங்களுக்காக மட்டுமே காப்பு நிதி பயன்படுத்தப்பட்டது தெரிகிறது. இது ஓர் அரிய வகை நெருக்கடி என்பதே அதற்குக் காரணம். சம்பந்தப்பட்ட நெருக்கடிக்குத் தொடர்பில்லாத திட்டங்களுக்குக் காப்பு நிதியைப் பயன்படுத்த அனுமதிக்க அரசமைப்புச் சட்டத்தின்கீழ் எனக்கு அதிகாரம் கிடையாது. நெருக்கடி அடிக்கடி நிகழாத ஒன்றாக இருக்கவேண்டும்,” என்று திருவாட்டி ஹலிமா விவரித்தார்.
“உதாரணமாக, சுகாதாரம், மூப்படைவது போன்றவற்றுக்கான நீண்டகாலத் திட்டங்களுக்குக் காப்பு நிதியைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்க எனக்கு அதிகாரம் இல்லை,” என்பதையும் அவர் சுட்டினார்.
அதிபர் ஹலிமாவின் பதவிக் காலமான ஆறு ஆண்டுகளில் 11 வரவு செலவுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. அவற்றில் பல, கொள்ளைநோய்ப் பரவல் காலத்தைக் கையாள வரையப்பட்டவை.
அனைவரையும் உள்ளடக்கும் சமூகத்தின் முக்கியத்துவத்தை வலியுறத்த பல முயற்சிகளை எடுத்துள்ள திருவாட்டி ஹலிமாவுக்குக் கொள்ளைநோய்ப் பரவல் காலம் பெரும் இடையூறாக அமைந்தது. எனினும், அதையும் எதிர்கொண்டு கூடுமானவரை இதன் தொடர்பான மக்களைச் சென்றடைவதற்கான பல்வேறு நிகழ்ச்சிகளை மெய்நிகரில் நடத்தியதாகச் சொன்னார்.
கிருமிப் பரவல் சூழலால் திருவாட்டி ஹலிமாவால் மற்ற நாடுகளுக்கு அதிகாரத்துவப் பயணங்களையும் அரசு முறைப் பயணங்களையும் அதிகம் மேற்கொள்ள முடியாமல் போனது. கொள்ளைநோய்ப் பரவல் காலத்துக்குப் பிறகு அதை ஈடுகட்டவேண்டிய நிலை ஏற்பட்டது அவருக்கு.
கஸாக்ஸ்தான், உஸ்பெக்கிஸ்தான், சவூதி அரேபியா, ஜெர்மனி, நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கும் அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். திருவாட்டி ஹலிமா, அந்நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்ட முதல் சங்கப்பூர் அதிபர்.
“சவூதி அரேபியாவில் எனக்கு ‘கிங் அப்துலாஸிஸ்‘ விருது வழங்கப்பட்டது. அதுதான் அந்நாட்டில் வழங்கப்படும் ஆக உயரிய குடிமை விருது. கஸாக்ஸ்தானில் எனக்கு ‘டொஸ்டிக்’ விருது கிடைத்தது. அந்த உயரிய விருதை அந்நாட்டு அதிபர் எனக்கு வழங்கினார்,” என்று திருவாட்டி ஹலிமா தெரிவித்தார். கத்தார் சென்றபோது ஒட்டகங்கள், குதிரைகள் அணிவகுப்பின் மூலம் தமக்கு மரியாதை வழங்கப்பட்டதை சரிப்புடன் கலந்த பெருமையுடன் அதிபர் விவரித்தார்.
அதிகாரபூர்வ சடங்குகளை மேற்கொள்வதற்காக மட்டுமல்லாமல் சம்பந்தப்பட்ட நாடுகளிடையே சிங்கப்பூரைப் பற்றிக் கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருதரப்பு உறவை வலுப்படுத்தவும் இதுபோன்ற அரசு முறைப் பயணங்கள் உதவுவதாக திருவாட்டி ஹலிமா குறிப்பிட்டார்.
2017ஆம் ஆண்டில் அதிபராகப் பதவியேற்ற திருவாட்டி ஹலிமாவின் தவணைக்காலம் 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது. அடுத்த அதிபர் தேர்தலில் முன்னாள் மூத்த அமைச்சர் தர்மன் சண்முகரத்னம் போட்டியிடுவார் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது.