கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் அர்ஜென்டினா வென்றதைத் தொடர்ந்து, வெற்றிக் கிண்ணத்தைப் பெற மேடைக்கு வந்த அணித்தலைவர் லயனல் மெஸ்ஸிக்கு ‘பிஸ்த்’ எனும் தனிச்சிறப்பு வாய்ந்த அங்கி அணிவிக்கப்பட்டது.
அந்த அங்கியைத் தம்மிடம் வழங்கினால், மெஸ்ஸிக்கு $1 மில்லியனை வழங்குவதாக ஓமான் நாட்டு நாடாளுமன்ற உறுப்பினரும் வழக்கறிஞருமான அகமது அல் பர்வானி கூறியுள்ளார்.
“என் நண்பர் மெஸ்ஸி, உலகக் கிண்ணத்தை வென்றதற்காக உங்களுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுக்கு பிஸ்த் அணிவிக்கப்பட்டது என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது,” என்று அகமது டுவிட்டரில் பதிவிட்டார்.
“அந்தச் சிறப்பு அங்கியை என்னிடம் நீங்கள் வழங்கினால் உங்களுக்கு $1 மில்லியன் தருகிறேன்,” என்று அவர் மேலும் சொன்னார்.
உலகக் கிண்ணத்தை ஏந்தியபோது மெஸ்ஸி அணிந்திருந்த ‘பிஸ்த்’ அங்கியின் மதிப்பு $2,200 எனக் கூறப்படுகிறது.
தங்கம் இழையோடும் இந்தக் கருநிற ஆடை மன்னர்கள், இமாம்கள், எமிர்கள் போன்ற பெருமதிப்பிற்குரியோருக்கே அணிவிக்கப்படும்.
ஆயினும், மெஸ்ஸிக்கும் அவரது அணியின் சாதனைக்கும் மதிப்பளிக்கும் வகையில் அவ்வங்கியை அணிவித்து மத்திய கிழக்கு நாடான கத்தார் சிறப்பித்தது.
மெஸ்ஸிக்கு அணிவிக்கப்பட்ட அந்த அங்கி, காற்பந்து ரசிகர் அகமது அல் சலீமின் குடும்ப நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.
கத்தார் தலைநகர் தோஹாவில் செயல்பட்டுவரும் அல் சலீம் கடை, நாள் ஒன்றுக்கு எட்டு முதல் 10 ‘பிஸ்த்’ அங்கிகள் வரை விற்று வருகிறது.