துபாய்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் முதன்முறையாக பாகிஸ்தானிடம், அதுவும் பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி படுமோசமாகத் தோற்றுப்போனது.
அதனைத் தொடந்து நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தான் செய்தியாளர் கேட்ட கேள்வியால் இந்திய அணித்தலைவர் விராத் கோஹ்லி கடுப்பானார்.
ஆயினும், சிரித்தவாறே தமது அறிவார்ந்த பதிலால் அவரை மடக்கினார் கோஹ்லி.
இந்தப் போட்டியில் இந்திய அணியின் துணைத் தலைவரும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா, தாம் சந்தித்த முதல் பந்திலேயே ‘எல்பிடபிள்யூ’ முறையில் ஆட்டமிழந்தார்.
அதனால், இனிவரும் போட்டிகளில் அவரை நீக்கிவிட்டு, நல்ல ஆட்டத்திறனுடன் இருக்கும் இஷான் கிஷனை அணியில் சேர்ப்பீர்களா என்று கோஹ்லியிடம் கேட்டார் அந்தச் செய்தியாளர்.
இதனைக் கேட்டு முதலில் அதிர்ச்சியடைந்த கோஹ்லி, “துணிச்சலான கேள்விதான். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? அணித் தேர்வு எப்படி இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? சிறந்த அணி என்று நான் கருதிய அணியுடன்தான் களமிறங்கினேன். இதுகுறித்து உங்களது கருத்து என்ன? அனைத்துலக டி20 போட்டிகளில் இருந்து ரோகித் சர்மாவை நீங்கள் நீக்குவீர்களா? இதற்குமுன் நாங்கள் விளையாடிய ஆட்டத்தில் அவரது பங்களிப்பை அறிவீர்களா? (சிரித்தபடியே) உங்களது கேள்வி நம்ப முடியாத வகையில் உள்ளது. சர்ச்சையைக் கிளப்ப வேண்டும் என்று விரும்பினால் கூறிவிடுங்கள். அதற்கேற்ப நானும் பதில் சொல்கிறேன்,” என்று சொன்னார்.
இதன் தொடர்பில் டுவிட்டரில் கருத்துரைத்துள்ள இந்திய அணி வீரர் தினேஷ் கார்த்திக், “விராத் பதிலளித்தவிதம் எனக்குப் பிடித்திருந்தது. மிக முக்கியமாக, இதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான கேள்விகளை எதிர்கொள்ளும்போது நிதானத்தை இழக்காமல் இருப்பது மிகவும் சிரமம். பரபரப்பான, நெருக்கடி மிகுந்த போட்டிக்குப்பின், விராத் அமைதியுடன் நடந்துகொண்டது சிறப்பு,” என்றார்.