கொவிட்-19 விதிமுறைகளை மறந்து நடைபெற்ற திருமணம்

கொவிட்-19 விதிமுறைகளை மறந்து நடைபெற்ற திருமணம்

2 mins read
95bcd4d2-259b-45f6-b42f-02d2a67ccb64
படம்: தமிழக ஊடகம் -

கொரோனா கிருமித்தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு நடப்பில் இருக்கும் தற்போதைய சூழலில் சமூக இடைவெளியைப் புறக்கணித்து, முகக்கவசம் அணியாமல் 500க்கும் மேற்பட்ட உறவினர்கள் புடைசூழ, யானை மீது அமர்ந்த மாப்பிள்ளை ஊர்வலத்துடன், தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் தடபுடலாக நடத்தப்பட்ட திருமணத்தால் சர்ச்சை கிளம்பியுள்ளது.

ஆலங்குளத்தை அடுத்த காசியாபுரத்தில் பைனான்சியரும் வியாபாரிகள் நலச்சங்க செயலாளருமான ஆறுமுக பாண்டியன் - பன்னீர் செல்வம் தம்பதியரின் மகன் திபாஸ்கர் என்பவரின் திருமணம் நேற்று (ஜூன் 6) நடந்தது.

முழு ஊரடங்கு நடப்பில் இருந்ததால் 50 பேர் வரை மட்டுமே பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறை இருந்த நிலையில் அரசியல் பிரமுகர்கள் வருவதாக திருமணப் பத்திரிக்கையில் அச்சிடப்பட்டிருந்ததால் அந்தப் பகுதிக்கு போலிசாரோ வருவாய் துறை அதிகாரிகளோ தலைகாட்டவில்லை எனக் கூறப்படுகிறது.

உள்ளூர், வெளியூரில் இருந்து உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்ட இந்த திருமணத்திற்காக மாப்பிள்ளையை யானை மீது அமரவைத்து ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

ஆலங்குளத்தில் ஊரடங்கு கட்டுப்பாடு அமலில் இருந்தபோதும், காசியாபுரத்தில் ஊரடங்கை புறக்கணித்து, முகக்கவசம் அணியாமல் திரண்ட ஊர் மக்கள், திருமணம், விருந்து ஆகியவற்றில் சமூக இடைவெளியை மறந்தனர்.

பல இடங்களில் திருமண விழாக்கள், விருந்து நிகழ்ச்சிகள் போன்றவை கொரோனா கிருமித்தொற்றுக்குக் காரணமாக இருந்திருப்பதை அந்த ஊர் மக்கள் உணராதது ஏன் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதே நேரத்தில், இந்த திருமணத்தைக் காட்டும் காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வரும் வேளையில், கிருமித்தொற்று ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ஆடம்பர திருமண ஏற்பாடுகளை செய்த பைனான்சியர் ஆறுமுக பாண்டியனிடம் மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் போலிசார் விசாரணை நடத்தி வருவதாக பாலிமர் நியூஸ் இணையத்தளம் செய்தி வெளியிட்டது.

குறிப்புச் சொற்கள்