கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, கடந்த ஆண்டு தொடக்கம் முதல், தமிழ்நாட்டின் கோவையில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானச் சேவை நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது.
அதன்பின், கோவைக்கும் ஐக்கிய அரபு சிற்றரசுகளின் சார்ஜாவுக்கும் இடையே தினசரி விமானச் சேவை இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், கோவைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விமானச் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
வாரத்தில், புதன், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த விமானச் சேவை வழங்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இரவு 10.45 மணிக்கு கோவை விமான நிலையத்தில் தரையிறங்கும் விமானம், மீண்டும் இரவு 11:45 மணிக்கு கோவையில் இருந்து சிங்கப்பூர் புறப்படும். இந்த விமானச் சேவையை, ஸ்கூட் நிறுவனம் வழங்குகிறது.
இதுகுறித்து கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “சிங்கப்பூரில் இருந்து நேரடியாக கோவை வருபவர்கள் மட்டுமே இந்த விமானச் சேவையைப் பயன்படுத்த முடியும். வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து, அங்கிருந்து கோவை வர முயற்சி செய்பவர்கள் இச்சேவையைப் பயன்படுத்த முடியாது,” என்றனர்.