தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, வாக்குச்சாவடியில் கூட்ட நெரிசலை ஏற்படுத்தியதற்காகவும் வரிசையில் நிற்காமல் வாக்கு செலுத்தியதற்காகவும் அங்கிருந்த மக்களிடம் நடிகர் விஜய் மன்னிப்பு கேட்டுள்ளார்.
வாக்குப்பதிவு நாளான சனிக்கிழமை (பிப்ரவரி 19) சென்னை, நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்தார் விஜய்.
இவருடைய வருகையால் வாக்குச்சாவடியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால், வரிசையில் நிற்காமல் நேராக சென்று வாக்கு செலுத்தினார் விஜய். அதற்காக, வரிசையில் நின்றிருந்தவர்களிடம் மன்னிப்பு கேட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டார் இவர்.
சட்டசபை தேர்தலின்போது வாக்களிக்க சைக்கிளில் வந்த விஜய், இம்முறை ரசிகர்கள் புடைசூழ காரில் வந்திறங்கினார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட, தம்முடைய ஆதரவாளர்களை நேரடியாக களம் இறக்கியுள்ளார் விஜய். கடந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகமாக போட்டியிட்ட விஜய் ஆதரவாளர்கள், இம்முறை விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரில் அதிகாரபூர்வமாக களமிறங்கியுள்ளனர்.