சென்னை: சென்னையில் சவாரிக்காகக் காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தமது ஆட்டோவின் இருக்கையில் ஒரு கைப்பை இருப்பதைக் கண்டார்.
அதைத் திறந்து பார்த்தபோது அதனுள் ரூ.1 லட்சத்து 23 ஆயிரம் இருந்தது. அத்துடன் அடையாள அட்டை ஒன்றும் அந்தப் பையில் இருந்தது.
தி.நகரில் இருந்து அரும்பாக்கத்துக்கு ஒரு பயணியை ஏற்றிச் சென்றது அந்த ஓட்டுநரின் நினைவுக்கு வந்தது.
ஆனால், அந்தப் பயணியை எங்கே போய் தேடுவது என்று தெரியாத நிலையில், ஸ்ரீதர் என்ற அந்த ஓட்டுநர் அந்தக் கைப்பையை வேப்பேரி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்.
ஸ்ரீதர் ஒப்படைத்த கைப்பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து பணத்தைத் தவறவிட்ட அந்தப் பயணியின் தொலைபேசி எண்ணைக் கண்டுபிடித்த காவல்துறை அதிகாரிகள், அந்தப் பயணியை வரவழைத்தனர்.
பூர்ணிமா என்ற அந்தப் பயணி, நேர்மையான அந்த ஆட்டோ ஓட்டுநரைப் பாராட்டி, அவருக்கு ரூ.5,000ஐ சன்மானமாக வழங்கினார். ஆட்டோ ஓட்டுநர் ஸ்ரீதரை காவல்துறை அதிகாரிகளும் பாராட்டினர்.