சென்னை: அரசியலைக் கடந்த மனிதநேயம் தான் திமுகவையும் மக்கள் நீதி மய்யம் கட்சியையும் இணைத்துள்ளது என கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
தனது பிறந்தநாளையொட்டி செய்தியாளர்களிடம் பேசிய அவர், எல்லாருக்கும் தனிக்கட்சி உள்ளது என்றும் அக்கட்சி மீது விசுவாசம் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
“ஆனால் அதைவிட மனித நேயம் முக்கியம். அதுதான் எங்களை இணைத்துள்ளது என்பேன். எங்கள் பணி மனித நேயத்துடன் தொடரும்,” என்றார் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரான கமல்ஹாசன்.
முன்னதாக சென்னை எழும்பூர் பகுதியில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு, காற்றின் ஈரப்பதத்தில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தை அவர் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய அவர், மாசு இல்லா குடிநீரை வழங்கும் இந்த இயந்திரத்தை அனைத்து மருத்துமனைகளுக்கும் வழங்குவதற்கு தமிழக அரசாங்கம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.