சென்னை: தேசிய புலனாய்வு முகமை மேற்கொண்ட அதிரடிச் சோதனை நடவடிக்கையின்போது பங்ளாதேஷைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையின் புறநகர்ப் பகுதியான படப்பையில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. கைதான சபாபுதீன் என்ற ஆடவர் போலி ஆதார் அட்டையைத் தயாரித்து இந்தியாவுக்குள் ஊடுருவியதும் பின்னர், வேலை வாய்ப்பு தேடிக் கொண்டதும் தெரிய வந்துள்ளது. அவருடன் தங்கியிருந்த இரண்டு பேரும் கைதாகினர்.
திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது போன்று அந்த போலி ஆதார் அட்டை தயாரிக்கப்பட்டது. பங்ளாதேஷைச் சேர்ந்த ஏராளமானோர் வடமாநிலத்தவர்கள் எனும் போர்வையில் தமிழகத்திற்குள் ஊடுருவி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டுக்குள் சட்ட விரோதமாக ஊடுருவியுள்ள வெளிநாட்டவரைக் கண்டறியும் வகையில் தேசிய புலனாய்வு முகமை செவ்வாய்க்கிழமை பத்து மாநிலங்களில் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது.
தமிழகம், திரிபுரா, அசாம், மேற்கு வங்கம், கர்நாடகா, தெலுங்கானா, ஹரியானா, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், புதுவையில் நடந்த சோதனையின்போது, மேலும் பலர் போலி ஆவணங்களுடன் பிடிபட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே, சென்னையின் புறநகர்ப் பகுதிகளான பள்ளிக்கரணை, பெரும்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளையும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தங்களது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வந்து நேற்று அதிகாலை முதல் சோதனை நடவடிக்கை மேற்கொண்டதாக ஏஷியாநெட் தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. வெளிநாட்டவர்கள் பலர் தமிழகத்துக்குள் ஊடுருவி மக்களோடு மக்களாக சந்தேகம் எழாத படி வசித்து வருவதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுதொடர்பாக ஏற்கெனவே பதிவாகி உள்ள வழக்குகளின் அடிப்படையில் புலனாய்வு அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டுள்ள சபாபுதீனுடன் பல மாதங்களாக தங்கியுள்ள முன்னா என்பவர் மறைமலை நகர் பகுதியில் உள்ள பழரசக் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
தேசிய புலனாய்வு முகமையின் இந்த நடவடிக்கை மேலும் சில நாட்கள் நீடிக்கும் என கூறப்படுகிறது.