சென்னை: அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக தொகுதிப் பங்கீடு தொடர்பாக 2ஆம் கட்ட பேச்சு வார்த்தையை நடத்தி முடித்துள்ளது.
முதல் கட்டமாக மார்ச் முதல் தேதி அன்று விருகம்பாக்கத்தில் உள்ள விஜயகாந்தின் வீட்டில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவை அதிமுக குழுவினர் சந்தித்தனர்.
பின்னர் தேமுதிக குழுவினர் ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்திற்குச் சென்று பேச்சு நடத்தினர்.
அந்தப் பேச்சு வார்த்தை மரியாதை நிமித்தமானது என்று தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கூறியிருந்தபோதும், இரு கட்சிகளுக்கும் இடையே ரகசியப் பேச்சுவார்த்தை நடைபெற்று வந்துள்ளதாக அறியப்படுகிறது.
7 எம்.பி. தொகுதிகள், ஒரு மேல்சபை எம்.பி. பதவியை தேமுதிக கேட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதில் 4 தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன் வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக வருகிற 17ஆம் தேதிக்குள் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் பற்றி 3வது கட்டமாக இரு கட்சிகளுக்கும் இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
இந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது.
இதன் பின்னர் இரு கட்சிகளின் நிர்வாகிகளும் தொகுதி உடன்பாடு தொடர்பாக நேரில் சந்தித்து கையெழுத்துப் போட உள்ளனர்.