இந்தியச் சமூகத்தின் முக்கிய அடித்தள கட்டமைப்புகளின் ஒன்றான மக்கள் கழக இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களின் 45வது ஆண்டு நிறைவின்போது, சிங்கப்பூரர்கள் ஒன்றிணைந்த சமூகமாக செயல்படவும் சக சிங்கப்பூரர்களுடன் கலந்துரையாடவும் புதிய வழிகளை கண்டறிய வேண்டும் என்று துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கூறியுள்ளார்.
அதற்கு இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் அரும்பாடு படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“சிக்கல்களுக்கு தீர்வுகாணும் போது பல்வேறு தரப்பினரின் கருத்துக்களையும் பார்வைகளையும் கருத்தில் கொண்டு சமநிலையை அடைய முனைய வேண்டும். புரிதலை வளர்த்துக் கொள்வதன் மூலமே பரஸ்பர நம்பிக்கையை வலுப்படுத்தி ஒன்றுபட்ட சமூகமாக மேம்பட முடியும்,” என்றார் அவர்.
புதிய ஆண்டில் சிங்கப்பூரர்களுக்குப் பல சவால்கள் காத்திருப்பதாக எச்சரித்த துணைப் பிரதமர், அவற்றை வெற்றிகரமாகச் சமாளிக்க சிங்கப்பூரர்கள் ஒன்றாக சேர்ந்து பாடுபட்டு வலுவான சமூகத்தைக் கட்டிக்காக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
“சவால்களோ பிரச்சினைகளோ நம்மைப் பிளவுபடுத்த அனுமதிக்கவே கூடாது. அப்படி அனுமதிப்பதும் சிங்கப்பூர் வழி அல்ல,” என்று திரு வோங் வலியுறுத்தினார்.
சிரமம் ஏற்படும்போது எல்லோரும் சேர்ந்து வெற்றிகரமாகப் பாடுபடுவதில் அடித்தளக் கட்டமைப்புகள் மிக முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறிய அவர், இந்தச் சூழ்நிலையில் இன்னும் வலுவான, மேலும் பிணைப்புமிக்க சமூகத்தை உருவாக்குவதில் இந்தியர் நற்பணிச் செயற்குழுக்கள் தொடர்ந்து அரும்பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
“இந்தியர்களுக்கும் மற்றவர்களுக்கும் மத்தியில் சமூக ஒற்றுமையையும் பன்முக கலாசாரத்தையும் வலுப்படுத்துவதில் இந்தியர் நற்பணிச் செயற்குழுக்களின் பங்கு இன்றியமையாதது. இந்தியர்கள் உள்பட சிங்கப்பூரர்களின் தேவைகளை கண்டறிந்து பூர்த்தி செய்வதில் இச்செயற்குழுக்கள் கடந்த 45 ஆண்டுகளாக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன,” என்று புகழாரம் சூட்டினார் திரு வோங்.
கொவிட்-19 நோய்த்தொற்று சூழலில் முகக்கவசம், சுத்திகரிப்பான், சுகாதார அன்பளிப்பு பைகள் போன்றவற்றை விநியோகிப்பதிலும் உடல், மன, சமூக நலனை மேம்படுத்தும் நடவடிக்கைகளிலும் பங்குபெற்ற தொண்டூழியர்களின் சமூகத் தொண்டு மகத்தானது என்றும் திரு வோங் பாராட்டினார்.
பல செயற்குழுக்கள் விளையாட்டு மனநலம், தொழில்முனைவோருக்கு ஊக்கம் போன்றவற்றில் இளையர் குழுக்களை உருவாக்கியுள்ளதை வரவேற்ற அவர், இத்தொண்டூழிய பணியில் தன்னார்வமிக்க இளையர்களை அதிகம் ஈடுபடுத்த கூடுதலாக முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆண்டு நிறைவு விழாவில் போக்குவரத்து அமைச்சர் திரு எஸ் ஈஸ்வரன், தொடர்பு, தகவல், சுகாதார ஆகியவற்றுக்கான மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி, அடித்தள அமைப்புகளின் தலைவர்கள் உள்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.