பங்ளாதேஷ் தலைநகர் டாக்காவில் முக்கியமான சந்தைப் பகுதியாக விளங்கிய பங்கபஸார் வணிக வளாகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
கிட்டத்தட்ட 3,000 கடைகளைக் கொண்ட அந்தப் பெயர்பெற்ற ஆடைச்சந்தையில் காலை 6.10 மணிக்குத் தீப்பற்றியதாகவும் நண்பகல் 12.36 மணிக்கு அது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் தீயணைப்பு, குடிமைத் தற்காப்பு அதிகாரி லிமா காணம் தெரிவித்தார்.
தீயணைப்பு வீரர்களில் குறைந்தது நால்வர் காயமுற்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அச்சந்தையில் எதுவும் மிஞ்சவில்லை என்று பங்ளாதேஷின் ‘தி டெய்லி ஸ்டார்’ ஊடகம் தெரிவித்துள்ளது.
தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புப் படையைச் சேர்ந்த 50 பிரிவினரும் ராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டனர். தீயணைப்புப் பணியில் விமானப்படை ஹெலிகாப்டரும் பயன்படுத்தப்பட்டது.
“என் வாழ்க்கையில் இதுபோல் ஒரு தீ விபத்தைக் கண்டதே இல்லை. என் கடை முற்றிலுமாக எரிந்துபோனது,” என்று திரு அப்துல் மன்னான் என்பவர் கைப்பேசியில் தன் உறவினரிடம் கண்ணீருடன் புலம்பியதைக் கேட்க முடிந்தது.
நோன்புப் பெருநாள் நெருங்கும் நிலையில் அங்கிருந்த ஆடைக் கடைகளில் சரக்குகள் குவித்து வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்பட்டது.