நெருக்கடி காலத்தின்போது சமூக அமைப்புகளும் தனிநபர்களும் ஒன்று சேர்ந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ முன்வரும் செயல் பெரும் ஊக்கமளிக்கிறது என்று பிரதமர் அலுவலக அமைச்சரும் நிதி, கல்வி ஆகியவற்றுக்கான இரண்டாம் அமைச்சருமான இந்திராணி ராஜா தெரிவித்துள்ளார்.
இந்து அறக்கட்டளை வாரியத்தின் தலைமையில் சிங்கப்பூரில் உள்ள இந்து கோயில்களும் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து வெளிநாட்டு ஊழியர்களுக்கான பராமரிப்புப் பொருட்கள் அடங்கிய பொட்டலங்களைத் தயாரிக்கும் முயற்சியில் இறங்கின.
சலவை சோப்பு, பற்பசை, பல்துலக்கி, சீப்பு, குளியலுக்குப் பயன்படும் துண்டு, முகம் பார்க்கும் கண்ணாடி, டி-சட்டை, உள்ளாடை, கைச் சுத்திகரிப்பான் உள்ளிட்ட 15 பொருட்கள் அந்தப் பராமரிப்புப் பொட்டலங்களில் இருக்கும்.
அவற்றின் ஒரு பகுதியை மருத்துவமனைகளுக்கு அனுப்பும் நிகழ்வு இன்று (மே 1) பிஜிபி அரங்கின் தரைத்தளத்தில் நடைபெற்றது. அந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட குமாரி இந்திராணி, “மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட கொவிட்-19 நோயாளிகள் குணமாகி, மாற்று தங்கும் விடுதிகளுக்கு அனுப்பப்படும்போது, அவர்களின் சொந்த பயன்பாட்டுக்கான பொருட்கள் அவர்களிடம் இருப்பதில்லை.
“காரணம் அவர்கள் தங்கள் தங்கும் விடுதிகளிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டபோது, அந்தப் பொருட்களை அவர்கள் தங்களுடன் எடுத்து வரவில்லை.
“ஆக, அவர்களுக்குத் தேவையான பராமரிப்புப் பொருட்கள் என்ன என்பதை சிகிச்சை பெற்ற மருத்துவமனைகளிலிருந்து அறிந்து, அதற்கேற்றவாறு பொருட்களைச் சேகரித்து கொடுக்கும் இந்து கோயில்கள் மற்றும் அமைப்பு களின் முயற்சி அற்புதமானது,” என்றும் அமைச்சர் பாராட்டினார்.
“குறிப்பாக, அந்தப் பொருட்களில் ஒன்றான குளியலுக்குப் பயன்படும் துண்டு, வெளிநாட்டு ஊழியர்களின் சொந்த நாடுகளிலிருந்து தருவிக்கப்பட்டு உள்ளது. அதைப் பார்க்கும் அவர்களுக்கு தங்கள் தாய்நாட்டில் இருக்கும் உணர்வு மேலோங்கும்.
“வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவும் இந்த முயற்சி 'எஸ்ஜி யுனைடெட்' எனும் தேசிய திட்டத்தின் ஒரு பகுதியாகும். வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவ விரும்பும் தனிநபர்களும் அமைப்புகளும் ‘எஸ்ஜி யுனைடெட்’ இணையத் தளம் மூலம் தங்கள் உதவியை அளிக்கலாம்,” என்றும் குமாரி இந்திராணி தெரிவித்தார்.
“மருத்துவமனைகளுக்கு 1,000 பராமரிப்புப் பொட்டலங்கள் அனுப்பப்பட்டன. எஞ்சியுள்ள சுமார் 5,000 பொட்டலங்கள் பின்னர் விநியோகிக்கப்படும். ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரை இந்த பராமரிப்புப் பொட்டலங்கள் முயற்சிக்கு $100,000க்கு மேல் நன்கொடை கிடைக்கப்பெற்றது.
“இந்த ஒருங்கிணைந்த முயற்சிக்கு ஆதரவளித்த இந்து ஆலயங்கள் மற்றும் அமைப்புகளுக்கு தனது நன்றியை இந்து அறக்கட்டளை வாரியம் தெரிவித்துக்கொள்கிறது என்று அதன் அறிக்கை கூறியது.