சிங்கப்பூரில் இன்று (ஜூலை 2) நண்பகல் நிலவரப்படி புதிதாக 188 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44,310 ஆகியுள்ளது.
இன்று உறுதி செய்யப்பட்ட கிருமித்தொற்று சம்பவங்களில் 10 உள்ளூர் சமூகத்துடன் தொடர்புடையவை என சுகாதார அமைச்சு தெரிவித்தது. அவர்களில் எண்மர் சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தரவாசிகள்; இருவர் வேலை அனுமதிச் சீட்டு வைத்திருப்பவர்கள்.
இன்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து திரும்பிய பின், இங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்.
மற்ற சம்பவங்கள் விடுதிகளில் வசிக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் தொடர்பிலானவை.
இதன் தொடர்பிலான கூடுதல் விவரங்களை அமைச்சு பின்னர் வெளியிடும்.
நேற்று கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 215 பேரில் நால்வர் வெளிநாடுகளிலிருந்து திரும்பியவர்கள். அவர்களில் இருவர் சிங்கப்பூரர்கள்; ஒருவர் நிரந்தரவாசி. இம்மூவரும் பாகிஸ்தானிலிருந்து சிங்கப்பூருக்குத் திரும்பியவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
ஜூன் 19, 20 தேதிகளில் சிங்கப்பூர் திரும்பிய அவர்கள் இல்லத் தனிமைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இம்மூவருக்கும் அறிகுறிகள் இல்லை என்று கூறப்பட்டது.
வெளிநாட்டிலிருந்து திரும்பிய நான்காவது நபர் 39 வயதான வேலை அனுமதிச்சீட்டு வைத்திருக்கும் இந்தோனீசியர்.
ஃபூனான் மால், லக்கி பிளாசாவில் உள்ள மெக்டொனால்ட்ஸ் ஆகிய இடங்களுக்கு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் (கிருமித்தொற்றைப் பரப்பும் நிலையில் இருந்தவர்கள்) சென்று வந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் நார்த் பாயின்ட் சிட்டியில் உள்ள சின் வாங் ஹான் காங் கஃபே, ஜோ அண்ட் டோ கடைகளுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
உள்ளூர் சமூகத்தில் தினசரி சராசரி புதிய கிருமித்தொற்று எண்ணிக்கை கடந்த வாரத்தில் 8ஆக உயர்ந்திருக்கிறது. அதற்கு முந்தைய வாரத்தில் இந்த எண்ணிக்கை 4ஆக இருந்தது.
ஏற்கெனவே அறியப்பட்ட கிருமித்தொற்று குழுமங்களுடன் தொடர்பில்லாத புதிய சம்பவங்களின் கடந்த வார தினசரி சராசரி 4ஆக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய வாரத்தில் அந்த எண்ணிக்கை 2ஆக இருந்தது.
நேற்று மேலும் 511 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். அதனையும் சேர்த்து இது வரை 38,999 பேர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை கொரோனா கிருமித்தொற்றால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். கிருமித்தொற்று கண்டு, ஆனால் மற்ற காரணங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆகியுள்ளது.
அனைத்துலக அளவில் கொவிட்-19ஆல் 10.7 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்; 518,000க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
அனைத்து செய்திகளையும் முழுமையாக வாசிக்க தமிழ் முரசு சந்தாதாரராகுங்கள்! https://tmsub.sg/online