வெளிநாட்டு ஊழியர்களிடையே அறிகுறிகளற்ற கொவிட்-19 தொற்றை கூடிய விரைவில் கண்டுபிடிக்க, குறைந்த கால இடைவெளியில் பரிசோதனைகள் செய்வதன் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கான முன்னோடித் திட்டத்தின் அங்கமாக, கூடுதல் வழக்கமான பரிசோதனைகளுக்கு டோ குவான் ஊழியர் தங்கும் விடுதிவாசிகள் உட்படுத்தப்படுவர்.
விடுதிகளில் தங்கியிருக்கும் ஊழியர்கள் அனைவரும் தற்போது 14 நாட்களுக்கு ஒரு முறை அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான பரிசோதனைகளுக்குச் (RRT) செல்ல வேண்டும் என மனிதவள அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவை இன்று (செப்டம்பர் 23) இணைந்து வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
புதிய கிருமித்தொற்று சம்பவங்களைத் திறம்பட தடுப்பதற்கான பல அடுக்கு உத்திகளின் ஓர் அங்கம் இது.
இருப்பினும், இம்மாதம் 25ஆம் தேதி முதல் நான்கு வார காலத்துக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட வழக்கமான பரிசோதனைகளுடன், டோ குவான் தங்கும் விடுதிவாசிகளுக்கு கூடுதலாக ஒரு பரிசோதனையை அரசாங்கம் சோதனை அடிப்படையில் மேற்கொள்ளும்.
இதன்படி, அவர்களுக்கு 7 நாட்களுக்கு ஒரு முறை கொவிட்-19 பரிசோதனைகள் செய்யப்படும். எனவே புதிய கிருமித்தொற்றுகளை கூடிய விரைவில் அறிந்துகொண்டு, பரவல் தடுப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியும் என அமைச்சுகள் தெரிவித்தன.
வெளிநாட்டு ஊழியர்களின் வேலைத் திட்டத்தின் மீதான தாக்கத்தைக் குறைக்கும் நோக்கில், இந்த முன்னோடித் திட்டம் விடுதிகளுக்குள் செயல்படுத்தப்படும்.
வழக்கமாக மூக்கின் பின்புறத்துக்கு குச்சியைச் செலுத்தி மாதிரி சேகரிப்பதற்குப் பதிலாக மற்றொரு எளிய, அதிக வசதியான முறையைப் பயன்படுத்தி பரிசோதனை மாதிரிகள் சேகரிக்கப்படும்.
இந்தப் புதிய முறையில் தொண்டையிலிருந்தும் மூக்கின் நடுப்பகுதியிலிருந்தும் பரிசோதனை மாதிரி சேகரிக்கப்படும். இது குறைவான அசௌகரியத்தையே ஏற்படுத்தும் என்று கூறப்பட்டது.
புதிய கிருமித்தொற்று சம்பவங்களை கூடிய விரைவில் கண்டுபிடிப்பதன் மூலம், விடுதிகளின் முழு புளோக்குகளும் தனிமைப்படுத்தப்படுவதைத் தவிர்க்க இயலும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதன் மூலம் கிருமித்தொற்று அபாயமுள்ள குறிப்பிட்ட சிலரை மட்டும் தனிமைப்படுத்தலாம். ஊழியர்கள், நிறுவனங்களுக்கு இடையூறு குறைக்கப்படும் எனவும் அமைச்சுகள் தெரிவித்துள்ளன.