எதிர்காலத்தில் வாகனமோட்டிகள் தங்களுக்கு விருப்பமான மின்சார காரை கைபேசி மூலம் வாங்கி, அதை விருப்பத்துக்கு ஏற்ப வடிவமைத்து, அது தயாரானதும் சிங்கப்பூரின் ஹியுண்டே பணி மனையிலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.
சிங்கப்பூரின் உயர் தானியக்கத் தொழிற்சாலையில் தங்களின் வாகனம் உருவாவதை வாடிக்கையாளர்கள் காணவும் முடியும்.
ஜூரோங் வட்டாரத்தில் 2022ஆம் ஆண்டிறுதிக்குள் கட்டி முடிக்கப்படவுள்ள ‘ஹியுண்டே மோட்டார் குழும புத்தாக்க மையம்’ உலகிலேயே இவ்வகை பணிமனைகளில் முதலாவதாகும்.
நேற்று காலை நடைபெற்ற திட்டத்தின் மெய்நிகர் நிலஅகழ்வு நிகழ்ச்சியில் பிரதமர் லீ சியன் லூங், தென்கொரிய வர்த்தக, தொழில் மற்றும் எரிசக்தி அமைச்சர் சங் யுன்-மோ மற்றும் ஹியுண்டே மோட்டார் குழுமத்தின் நிர்வாகத் துணைத் தலைவர் இயூசான் சுங் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இத்திட்டத்திற்காக தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனமான ஹியுண்டே செய்துள்ள முதலீடு குறித்து பிரதமர் லீ, “ஹியுண்டே குழுமம் அதன் புதிய வசதியை சிங்கப்பூரில் அமைக்க முடிவெடுத்திருப்பதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி. கிட்டத்தட்ட $400 மில்லியன் மதிப்பிலான இந்த முதலீட்டின் மூலம் 2025ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வோர் ஆண்டும் 30,000 வாகனங்கள் வரை தயாரிக்கலாம்,” என்று தெரிவித்தார்.
பாகங்களை ஒன்றுசேர்த்து மின்சார கார் உருவாக்கும் சிறிய அளவிலான வசதியை இம்மையம் கொண்டிருக்கும். அதன்மூலம் ஆண்டிற்கு 30,000 வாகனங்கள் வரை தயாரிக்க முடியும் என எதிர் பார்க்கப்படுகிறது.
புதிதாக கட்டப்படும் மையம், நடமாட்டக் கருத்தாக்கங்கள் தொடர்பிலான ஹியுண்டே நிறுவனத்தின் ஆய்வு, உருவாக்கப் பணிகளுக்கு ஒரு திறந்த, புத்தாக்க ஆய்வகமாகச் செயல்படும்.
மேலும், 28,000 சதுர மீட்டர் பரப்பளவில் அதிநவீனமயமாக உருவாக்கப்படும் இம்மையத்தில் பயணி வானூர்திகள் தரையிறங்கும் தளம் ஒன்றும் அமையும்.
இந்த மையத்தில் தயாராகும் கார்கள் உள்ளூரில் விற்பனையாகும். இவற்றுக்கான ஏற்றுமதி திட்டங்கள் பின்னர் நடப்புக்கு வரும் என்று கூறப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப கார்களை வடிவமைக்க, அறிவார்ந்த அம்சங்களை உருவாக்கும் வழிகள் குறித்து ஹியுண்டே, நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து செயல்படும்.
“விநியோகத்திற்கு கார் தயாரானதும், அது கட்டடத்தின் மேல் தளத்தில் 620 மீட்டர் உயரத்தில் உள்ள சோதனைத் தடத்திற்கு மாற்றப்படும். வாடிக்கையாளர் அங்கு வாகனத்தை ஓட்டிச் சோதித்துப் பார்க்கலாம்,” என்று ஹியுண்டே தெரிவித்தது.
ஏழு மாடிக் கட்டடத்தின் மேல்தளத்தில் இந்த சோதனைத் தடம் அமைந்திருக்கும். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சிங்கப்பூரில் கார் தயாரிப்புப் பணிகள் ஹியுண்டேயின் இம்முடிவால் தொடங்கவுள்ளன.
“மின்சார வாகனங்களில் குறைவான இயந்திரப் பாகங்களும் அதிக மின்னணுவியல் அம்சங்களும் உள்ளன. இது சிங்கப்பூரின் வலிமைக்கு ஏற்றதாக இருக்கும். அதனால்தான், தானியங்கி மின்னணுச் சாதனங்களைத் தயாரிக்கும் ‘டெல்ஃபி’, ‘இன்ஃபினியோன்’ போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சிங்கப்பூரில் சில காலமாகவே காலூன்றியுள்ளன,” என்றார் பிரதமர் லீ.