தேசிய மின்னிலக்க அடையாள முறையான சிங்பாசில் புதிய அம்சம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.
இதைக் கொண்டு இணையம் வழி சட்ட, வர்த்தக ஆவணங்களில் கையெழுத்திடலாம்.
இந்த அம்சத்தை சிங்கப்பூர் நில ஆணையம் முதலில் பயன்படுத்துகிறது.
நிலச் சொத்து தொடர்பான நோட்டீஸ்களில் இணையம் வழி கையெழுத்திட இது வகை செய்கிறது.
சிங்பாஸ் வழியாக ஆவணங்களில் கையெழுத்திடும் அம்சம் சிங்பாஸ் கைபேசிச் செயலியில் இடம்பெறுகிறது.
சிங்பாஸைப் பயன்படுத்தும் 2.1 மில்லியன் பேரின் தனிப்பட்ட விவரங்களையும் அடையாள அட்டையின் பட்டைக் குறியீட்டையும் இச்செயலி கொண்டிருக்கிறது.
விரல் ரேகை, முக அடையாளம் ஆகியவற்றை திறன்பேசிகளில் ஸ்கேன் செய்து இணையம் வழி அரசாங்க சேவைகளைப் பெற இந்தச் செயலி உதவுகிறது.
இதற்கு மறைச்சொல் தேவையில்லை.
புதிய மின்னிலக்க கையெழுத்து அம்சம் மூலம் செயலியைப் பயன்படுத்தி இணையம் வாயிலாக ஆவணங்களில் கையெழுத்திடலாம்.
செயலி மூலம் போடப்படும் கையெழுத்து மறைக்குறியாக்கப்பட்டதாக இருக்கும். கையெழுத்திட்டதும் அரசாங்கப் பதிவில் அது சரிபார்க்கப்பட்டு கையெழுத்திட்டவரின் அடையாளம் உறுதி செய்யப்படும்.
புதிய அம்சத்தை GovTech உருவாக்கியுள்ளது.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது மெய்நிகர் தெரிவுகள் மூலம் அரசாங்கப் பரிவர்த்தனைகளைச் செய்ய பலர் விரும்புகின்றனர்.
எனவே, இந்தப் புதிய அம்சம் சரியான நேரத்தில் அறிகமுகப்படுத்தப்படுவதாக அது கூறியது.
“சிங்பாஸ் வழியாக ஆவணங்களில் கையெழுத்திடும் அம்சம் வர்த்தகங்களின் செலவுகளைக் குறைக்கும்.
“ஆவணங்களைச் சரிபார்க்க ஆள்பலம் தேவையிருக்காது,” என்று GovTech அமைப்பின் தலைமை நிர்வாகி திரு கொக் பிங் சூன் தெரிவித்தார்.
புதிய அம்சத்தைப் பயன்படுத்தி ஆவணங்களில் கையெழுத்திட முதலில் சிங்பாஸ் கைபேசிச் செயலியில் இருக்கும் ஸ்கேன் அம்சத்தை இயக்க வேண்டும்.
பிறகு ஆவணத்தை படமெடுக்க வேண்டும். இதையடுத்து, தனிப்பட்ட கியூஆர் குறியீடு திரையில் காட்டப்படும்.
சிங்பாஸ் கைபேசிச் செயலியைப் பயன்படுத்தி அந்த கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்ய வேண்டும். இதன்மூலம் இணையம் வழி கையெழுத்திடுவதற்கான கோரிக்கை விடுக்கப்படும்.
அதே வேளையில் ஸ்கேன் செய்பவர்களின் முக அடையாளம் அல்லது விரல் ரேகையை சிங்பாஸ் கைபேசிச் செயலி சரிபார்த்து உறுதி செய்யும்.
அதன் பிறகு இணையம் வழியாக ஆவணத்தில் கையெழுத்திடலாம்.
கையெழுத்திடும்போது ஆவணத்தில் இடம்பெற்றுள்ள ரகசியத் தரவுகள் சேவைத் தளத்தலிருந்து GovTech அமைப்புக்கு இடம் மாறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டுக்குள் 90லிருந்து 95 விழுக்காடு சிங்கப்பூரர்கள் தங்கள் வீட்டில் இருந்தபடி அரசாங்கப் பரிவர்த்தனைகளை இணையம் வழி செய்ய அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது. இதற்கு ஏற்ப இந்தப் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறது.